காலமாகாத புனிதர் தந்தை செல்வா – அருட்தந்தை எம். எக்ஸ். கருணாரட்ணம் அடிகள்

திருப்பாடல் 15ஐ செபிப்பதன் மூலம் செல்வாவின் வாழ்விற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். இது ஓர் இறை ஏவுதல், தூய ஆவியின் தூண்டுதல். தந்தை செல்வா ஒரு புனிதர் என்ற எனது கருத்துக்கு சான்றாக திருப்பாடல் 15ஐயே முதலில் நான் எடுத்தியம்ப விரும்பினேன். ஆனால் இந்த நன்றி வழிபாட்டு புத்தகம் என் கையில் கிடைத்த பொழுது அங்கே அந்தத் திருப்பாடல் இருப்பதைக் கண்டு என் மனம் உறுதியடைந்தது.

செல்வா ஒரு புனிதர் என்று பறைசாற்ற துணிந்தது. எனவே இவ்வகையில் சான்று பகர்கின்றேன். செல்வா ஒரு  புனிதர். திருவிவிலிய மதிப்பீடுகளை இறைவைாக்குகளைத் தன்மனதில் இருத்தி வாழ்ந்தவர். பணம் சம்பாதிக்கும் தொழிலாக சட்டத்தரணிப் படிப்பை மேற்கொள்ளாமல், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்ற இலட்சியத்தோடு வாழ்ந்தவர். ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும்  நீதி கிடைக்க சாதாரண பயணிகள் பயணிக்கும் பேருந்து வண்டியிலே மல்லாகம் நீதி மன்றிலே வழக்காட வந்த எளிமையான காட்சிக்கு இன்னும் உயிரோடிருப்பவர்கள் சாட்சி.

குற்றவியல் வழக்கறிஞராக மாறிக் குற்றவாளிகளைத் தப்பிவிக்கும் முயற்சியிலே ஈடுபடாமல் குடியியல் வழக்குகளிலே தன்னை ஈடுபடுத்தி, நேர்மையான வழக்கறிஞராக செயற்பட்டு, நீதியை நிலைநாட்டியவர்.

”நடுவர் ஆவதற்கு விரும்பாதே. அநீதியை நீக்க உன்னால் இயலாமல் போகலாம். வலியவருக்கு அஞ்சி உன்நேர்மைக்கு இழுக்கு வருவிக்கலாம்” என்ற சீராக் நூலின் 7 ஆம் அதிகாரம் 6 ஆவது திருவசனத்தை என்றுமே தியானித்தவராய், நீதியாளர் பதவியை ஏற்காமல் இறுதிவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் வாழ்ந்தவர். ”தம் சிலுவையைச் சுமக்காமல் என்பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது’’ என்ற எக்கா 14:27 திரு வசனத்தை மனதிலிருத்தி உயிர் துறக்கும் வரை எவ்வித முணுமுணுப்பும் இல்லாமல், தனது அரசியல் வேதனைகளையும்,  உடல் வேதனைகளையும் தாங்கினார்.

”உங்களுள் தம் உடமையையெல்லாம் வீட்டுவிடாத  எவரும் என் சீடராய் இருக்க முடியாது” என்ற தேவ வாக்கை மனதில் இருத்த தனது மலேசிய சொத்துக்கள், தனது உழைப்பின் ஊதியங்களையெல்லாம் துன்புறும் தம் சகோதரருக்காய் இழந்தவர் தந்தை செல்வா. எப்பொழுதும் அமைதிக்கான வழிகளைத் தேடினார். பலவிட்டுக் கொடுப்புகளைச் செய்தார். கனிவோடு பேசினார். பணிவோடு செயற்பட்டார்.

மற்றவருக்குச் செவிசாய்க்கு முன்பே மறுமொழி செய்யாதே, அடுத்தவர் பேசும்போது குறுக்கே பேசாதே என்ற  சீராக் நூலின் அதிகாரம் 11:8 ஆம் திருவசனத்தை வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும்,  தனிப்பட்டவர்களுடனும் பேசும் போதும், நீதி மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் முறையாகக் கடைப்பிடித்தார்.

அதிகாரவெறி, சினம், கையூட்டல், காமக்கேளிக்கை, கலகம், பேராசை,  எதுவுமில்லாத எளிமையான புனிதராக வாழ்ந்த அவரை – அவரது வாழ்வை – கிறிஸ்தவ திருச்சபைகள் எதிர்காலத்தில் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு முன்மாதிரிகையாக, ஒரு வழிகாட்டியாக முன் வைக்காத காரணத்தால், தந்தை செல்வாவிற்குப் பிறகு பொதுவாழ்வில் கிறிஸ்தவர்கள் எவரும்  தலைமைத்துவத்தைப் பெறமுடியாமற் போனது. இது கிறிஸ்தவ சபைகளுக்கு ஒரு சாபக் கேடாகவும், சவாலாகவும் இன்றைக்கு இருக்கின்றது என்பதை நான் வலியுறுத்துகின்றேன்.

ஒரு தலைசிறந்த சமூகவியலாளர்

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே, பௌத்த, இந்து சமயச் சீர்திருத்தங்கள், தீவிரப் போக்கையடைந்த போது முன்னாள் பிரதமர்கள் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர்.ஜெய்வர்த்தனா, டி.எஸ்.சேனநாயக்கா, ரணில் விக்கிரமசிங்கா போன்ற தலைவர்களின் குடும்பங்கள்  அங்கிலிக்கன் திருப்சபையை விட்டு விலகின. அல்லது இரட்டை வேடங்களைத் தாங்கின.

இன்றைய சந்திரிகாவின் தந்தை எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா Why I become a Buddhist என்ற உப்புச்சப்பற்ற  நூலை வெளியிட்டு பௌத்தத்தை வெறிபிடித்த பௌத்தமாக்கி, தன் ஒழுக்க நெறிப்பிறழ்வை  வெளிப்படுத்தி, பதவியைக் காப்பாற்றிக் கொண்டபோது அங்கிலிக்கன் திருச்சபையின் நெறிதவறா  விசுவாசியாக தந்தை செல்வா விளங்கி, சகல இன,மத மக்களையும் கவர்ந்திருந்தார்.

இந்து,  இஸ்லாமிய, கத்தோலிக்க மத மக்கள் அனைவரையும் கவர்ந்ததோடு வடக்கு கிழக்கு, வன்னி,  மலையகம், கரையோரம் என்ற பிரதேச வேறுபாடுகளை அகற்றியவராய் சாதி,சமூக வேறுபாடுகளை  ஒழிக்கும் புரட்சி வீரராய்த் திகழ்ந்தார்.

சேர் பொன். இராமநாதன், சேர் பொன். அருணாசலம் போன்றவர்கள் காலத்தில் தமிழ்  மக்கள் ஏமாற்றப்பட்ட வேளையில், இஸ்லாமிய, கரையோரத் தமிழர் காட்டிக் கொடுக்கப்பட்ட வேளையில், தோன்றிய தமிழ் காங்கிரஸில் இணைந்து தமிழ் சமூகத்தின் நல்வாழ்விற்காய் வாழ்வை  அர்ப்பணித்தார்.

 1949இல் தமிழினத்தின் பிரிக்கமுடியா அங்கமான மலையகத் தமிழர்களின் குடியுரிமை  மறுக்கப்பட்டபோது அச்சமூகத்தின் நல்வாழ்விற்காய் குரல் கொடுத்தார். சமூக அநீதிக்குத் துணைபோக மாட்டேன் என்ற திடசங்கற்பம் பூண்டு தான் சார்ந்த அரசியல் கட்சியைத் தூக்கியெறிந்தார்.

அன்றைய அரசியல் பார்வையில் அது தந்தை செல்வாவின் அரசியல் தற்கெலை என்று வர்ணிக்கப்பட்டது. 1952 தேர்தலில் அவரது தோல்வியினால் அது உறுதியெனப்பட்டது. ஆனால் தந்தை செல்வாவின் கூர்மையான சமூகபார்வை, சமூக மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு 1958இல் அவரையும் அவரது தமிழரசுக் கட்சியையும் தமிழினத்தின் ஏகப்பிரதிநிதிகளாக அன்றைய நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தது.

பண்டாவைச் செல்வாவோடு ஒப்பந்தம் செய்ய வைத்தது.
சாதி வெறிபிடித்த தமிழ் சமூகப்பார்வையைச் சிதறடிக்க எவரது மனதையும் புண்படுத்தாது  விடுதலை என்ற போர்வையில் தீமை செய்யாதீர்கள் என்ற 1 பேதுரு 2:18 வாக்கியத்தை கடைப்பிடித்து, சம பந்தி போசனப் போராட்டங்களையும் ஆலய பிரவேசப் போராட்டங்களையும் எவ்வித பலாத்காரங்களுக்கும் இடங்கொடாது நடாத்தி வெற்றி கொண்டார்.

தந்தை செல்வா சமய உரையாடலாளர் 

தமிழர் தாயகத்திலே மிகச் சிறுபான்மையினரான அங்கிலிக்கன் திருச்சபையின் விசுவாசியாக  இருந்தாலும், கத்தோலிக்கரான நல்லூர் இ.மு.வி.நாகநாதன், மன்னார், வி.அழகக்கோன், யாழ் ஸி.எக்ஸ்.மாட்டீன், நீர்கொழும்பு பிரான்சிஸ் பெரேரா, மிக வைதீக இந்துக்களான, ஊர்காவற்றுறை வீ.ஏ.கந்தையா, திருமலை இராஜவரோதயம், கோப்பாய் கோமகன் வன்னியசிங்கம், மூதூர் ஏகாம்பரம், கல்குடா மாணிக்கவாசகம், உடுவில் தருமலிங்கம், பட்டிருப்பு இராஜமாணிக்கம், வட்டுக்கோட்டை அமிர்தலிங்கம், பருத்தித்துறை துரைரத்தினம், உடுப்பிட்டி ஜெயக்கொடி, சாய்மருந்தது மசூர் மௌலான, பொத்துவில் காரியப்பார், நிந்தவூர் முஸ்தாபா, மட்டக்களப்பு சின்னலெப்பை, கல்முனை எம்.ஸி.அகமட், மூதூர் முகமது அலி போன்ற இஸ்லாமியர்களையும் ஒரே இலட்சியத்தில் ஒன்றிணைத்து சமய முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.

இலங்கையின் சுதந்திரத்தின் பின் முடுக்கி விடப்பட்ட இனவிரிசல்கள், பிரதேச வேறுபாடுகள்,  சமயக் காழ்ப்புணர்வுகள் பற்றியெரிந்த வேளையில் தந்தை செல்வாவினால் எப்படி இந்தப் பெருந்  நரகத் தீயிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடிந்தது என்று ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் அவர் எப்போதும் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்பதை வெளிப்படையாகக் காட்டினார், வாழ்ந்தார், தன் நேர்மையான, உண்மையான, நீதியான வாழ்வால் சகல மதத்தலைவர்களோடும் மக்களோடும் அவர் சிறந்த உரையாடலைச் செய்திருந்தார்.

காலஞ்சென்ற யாழ் ஆயர் கலாநிதி பேரருட்திரு வ. தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களே தந்தை செல்வாவின் பாதையை
வெளியரங்கமாக மதித்தார்.

தான் வழி நடத்திய கத்தோலிக்க திருச்சபையை செல்வாவின்  வழியில் செல்லத் தூண்டினார். 1990களில் தமிழினம் இக்கட்டான ஒரு காலக்கட்டத்தை  சந்தித்தபோது தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எனக்கு  வாசித்துக்காட்டி தந்தை செல்வாவின் சமஷ்டி தான் தமிழினத்திற்கான ஒரு தீர்வு என்பதை  அன்றைய ஜனாதிபதி பிரேமதாஸவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுதிய கடிதங்களைச் சேர்ப்பிக்குமாறு என்னிடம் தந்தார்.

1972இல் புதிய இலங்கை குடியரசு அரசியல் யாப்பினை நிராகரித்து நாடாளுமன்றப் பதவியை  துறந்தார் தந்தை செல்வா. பின்னர் ஏற்பட்ட காங்கேசன்துறைத்தொகுதி இடைத்தேர்தலில் புதிய யாப்பினை தமிழ் மக்கள் நிராகரிக்கும் ஒரு கருத்துக்கணிப்பாக வைத்து தேர்தலில்  போட்டியிட்டார்.

அவ்வேளையில் அவரது தேர்தல் பிரசாரம் ஒரு பிரசித்தமான இந்துக்  கோவிலில்தான் ஆரம்பமானது. அவ்வேளையில் இந்து சமயச்சடங்களுடன் கொடுக்கப்பட்ட பிரசாதத்தை நான் ஒரு கிறிஸ்தவன், இதை பெறுவது உங்கள் சமய நம்பிக்கைகளை அவமதிக்கும் ஒரு செயலாகும் என அதைப் பெற மறுத்து, தன்னை ஒரு வேத சாட்சி என்பதை நிரூபித்த அதே வேளையில் எல்லோருக்கும் சமய சுதந்திரம் வேண்டும் என்ற கிறிஸ்தவக் கோட்பாட்டை வெளிப்படுத்தினார். பெரும்பன்மையான இந்துக்களை அவமதித்துவிட்டார், இது இவரது தேர்தல் வெற்றிக்குத் தடையாகும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் தந்தை அத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரைப் பெருவெற்றி கொண்டார்.

ஓர் உண்மையான அரசியலாளர் 1949 இல் சமஷ்டிக் கோட்பாட்டு அரசியல் கட்சியை அவர் தோற்றுவித்தது, அவரது அரசியல் ஞானத்தையும் தீர்க்க தரிசனப் பார்வையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. தந்தை செல்வாவை காற்சட்டைக் காந்தி, செவிடர், சம்மட்டியால் அடிவாங்கித் தந்த சமஷ்டிவாதி என்றெல்லாம் அவரது அரசியல் போட்டியாளர்கள் இகழ்ந்த போதெல்லாம், அமைதியாக பலவீனமான குரலில்,தளர்ந்த அசைவில், தன் இலட்சியத்தை முன்னெடுத்தார். தமிழ் சமூகத்தின் உயர்ந்த சாதியத்தின் திமிரில் அதிகார வெறிகொண்டவர்களின் முன் சாந்தமான செம்மறியாக நின்றார்.

1956 இல் சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரி முன்றிலில் வி.என்.நவரத்தினத்தின் தேர்தல் பிரசாரத்திற்காக வந்து மேடையில் அமர்ந்த போது, மேடை வெறியர்களால் கவிழ்க்கப்பட்ட போதும் எழுந்து சாந்தமாகவே பேசினார். அவருடைய பொறுமையினால் அன்றைய அமைச்சர் குமாரசாமியை எதிர்த்துப் போட்டியிட்ட சட்டக்கல்லூரி மாணவன் இளைஞன் வி.என்.நவரத்தினத்தை தேர்தலில் அமோக வெற்றி ஈட்டச் செய்தார்.

1970 தேர்தலில் உடுப்பிட்டிச் சிங்கமென வர்ணிக்கப்பட்ட அன்றைய உபசபாநாயகர் திரு.மு.சிவசிதம்பரத்தை மண் கவ்வ வைத்ததும் தந்தை செல்வாவின் அரசியல் சாணக்கியமே. கதிரைகளை வீசி அடித்து, ஒலிவாங்கிகளை பிடுங்கி எறிந்தும் சபாநாயகரின் செங்கோலைப் பறித்துக்கொண்டும், நெருப்புக்கொழுத்தியும், சமய குருமாரைத் தகாத இடங்களில் தாக்கியும் வரும் இந்தச் சிறிலங்கா நாடாளுமன்றப் பாரம்பரியத்தில், சபை அடங்கி, அமைதியோடு குறுக்கீடில்லாமல் பேச்சைக் கவனமாக கேட்டதென்றால் அது எப்பொழுதும் தந்தை செல்வா எழுந்து பேசிய போதுதான். எப்பொழுதும் உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவர், தகாத சொற்களைப் பாவியாதவர், எவரது மனதையும் புண்படுத்தாமல் பேசியவர் என்றால் தந்தை செல்வாவேதான்.

எந்த வேளையிலும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தார். விட்டுக்கொடுப்புக்களைச் செய்தாலும் தமிழர் தாயகக் கோட்பாட்டை இன்றைய தலைமுறைக்கு சொத்தாக  விட்டுச்சென்றவர். சிங்கள, பௌத்த பேரினவாதம் தமிழர்களுக்கு எதையும் கொடுக்கத் தயாரில்லை என்பதைத் தந்தை செல்வாவின் அரசியல் ஞானம்தான் உலகத்திற்கு எடுத்துக்காட்டியது.  அது மட்டுமல்ல எமக்கு இந்த உண்மையை வரலாற்றுச் சான்றாகளை விட்டுச்சென்றுள்ளார்.

ஒரு பலவீனமான பலசாலி

1949இல் தமிழரசுக்கட்சி தமிழ், சிங்களச் சமூகத்திற்கு ஒரு கேலியாக இருந்தது.  பலவீன மெல்லிய மனிதர் ஒருவர் தமிழர் விடுலையை முன்வைத்த போது சிரிப்பிற்கிடமாக இருந்தது.

1956இல் அடங்காத் தமிழர் சுந்தரலிங்கம் கியூஸியும் தனிப்பெருந்தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் கியூஸியும் தனித்து நாடாளுமன்றம் நுழைந்த போது பலவீனமான இறைவாக்கினர் செல்வாவோ இ.மு.வி.நாகநாதன், அமிர்தலிங்கம், வன்னியசிங்கம், வி.ஏ.கந்தையா, அழகக்கோன், இராஜவரோதயம், ஏகாம்பரம், இராசமாணிக்கம், மாணிக்கவாசகர், இராஜதுரை, சிவசுந்தரம்  போன்றவர்களோடு அமைதியாக ஆனால் படையணியாக நாடாளுமன்றம் நுழைந்தார். சிங்களம்  மட்டும் சட்டம் 24 மணித்தியாலங்களுள் பிரகடனப்படுத்தப்பட, கேடு கெட்ட காடைத்தனத்தை  நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அமைதியாகச் சாந்தமாக எதிர்த்து நின்றார்.

காலிமுகத்திடல் சத்தியாக்கிரக போராட்டத்தில் அவரை எப்போதும் எதிர்த்த ஜீ.ஜீ. அவர்களே கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இதைத் தொடர்ந்த சிங்கள சிறி இலக்கத்தகடுள்  வாகனங்களில் பொருத்துவதை எதிர்த்தார்.

பண்டாவால் பௌத்த காடைத்தனத்திற்கு அடிபணிந்து ஒருதலைப்பட்சமாக பின்னர் கிழித்தெறியப்பட்ட தமிழர் தாயகக் கோட்பாட்டை சிறிலங்காவின் பிரதமரால் ஒப்பந்தமாக ஏற்கவைத்தார். இதுவே இன்று விடுதலைப்போராக மாறிய தமிழர் வரலாற்று வெற்றிக்கு அடிகோலியது.

1958இன் இனக்கலவரம் தமிழர்களை அவர்களது தாயத்திற்கு அனுப்பும் ஒரு  சிங்கள நாட்டின் முயற்சி, இத்தீவில் இரண்டு தேசம் என்ற உண்மையை உலகம் ஒப்புக்கொள்ள வைத்தது.

அன்று அவர் தார்பூசி அழித்த சிங்கள சிறி இலக்கத்தகட்டை சர்வாதிகாரி  பிரேமதாசாவே தவறென அவற்றை அழித்துவிட்டார். அன்று நாட்டில் உயர் பதவியிலிருந்த அவரது அரசியல் போட்டியாளர் ஒருவரின் குடும்பபிரிவினைத் தனது அன்பினால் தடுத்து நிறுத்திய பெருமையும் அவரையே சாரும். 1960களில் ஐ.தே.கட்சி பெரும்பான்மை பலமில்லாமல் தவித்த  போது, தமிழர் அபிலாஷைகளை நிறைவேற்ற மறுத்த காரணத்தால், அக்கட்சியை சிம்மாசன  உரையன்றே கவிழ்த்து விட்டார்.

பின்னர் சிறிமாவோ பதவியில் அமர்ந்து, அடாவடித்தன அரசியல் செய்ய முயன்ற போது முழு வடக்கு, கிழக்கு மட்டுமல்ல, நீர்கொழும்பு வரையான தமிழர் தாயகப்  இயந்திரத்தை முடங்கவைத்தார். அவ்வேளையில் தமிழர்காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு பிரதிநிதி  மு. சிவசிதம்பரம் அவர்கள் தந்தை செல்வாவின் சாத்வீகப் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டியதாயிருந்து.

தமிழ் தேசத்தின் முதலாவது தபால் சேவையை ஆரம்பித்து முத்திரையையும் வெளியிட்டு வைத்தார். 1964இல் ஸி.பி.டி.சில்வா போன்றோர் அரசைவிட்டு வெளியேறிய போது அரசிற்கு முட்டுக்கொடுக்காமல் சிறிமாவோ அரசைக் கவிழ்த்தார். 1965இல் ஐ.தே.க. மீண்டும் பலவீன அரசாக அமைந்தபோது தமிழர் அபிலாஷைகளை முன்வைத்த அந்த அரசோடு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதுவும் 1969இல் முறிந்தது.

வடகிழக்கில் நீதிமன்றங்களில் தமிழ் நிர்வாக மொழி போன்ற விடயங்கள் அடங்கிய தமிழ் மொழி விசேட மசோதா நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட போது சிங்கள, பௌத்த வெறி வெளிப்பட்டது. மீண்டும் பௌத்த மதகுருக்கள் தமிழர்களுக்கு எதுவும் அற்ப சொற்ப உரிமைகள் கூட கொடுக்க விடமாட்டார்கள் என்ற சான்றை ஆவணப்படுத்த வைத்தது தந்தை செல்வா என்ற பலவீனமான பலசாலியின் சாணக்கியத்தால்தான்.

1970இல் மூன்றில் இரண்டு பெருபாண்மையுடன் நாடாளுமன்றம் நுழைந்த சிறிமா தமிழர்களுக்கு என்றிருந்த 29 ஆவது பாதுகாப்பு சரத்தை விலக்கி, சிங்கள பௌத்த குடியரசை ஏற்படுத்த கொண்டுவந்த 1972 புதிய அரசியல் யாப்பினை நிராகரித்து தீயிட்டுக்கொழுத்தி தமிழர் தேசம் சிறிலங்கா தேசத்தின் இறைமைக்கு உட்பட்டதல்ல என உலகறியச் செய்ய தனது நாடாளுமன்றப் பதவியைத் தூக்கியெறிந்தார்.

காங்கேசன்துறை இடைத்தேர்தல் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பதவிகள், அபிவிருத்திகள் என்றொல்லாம் நப்பாசை காட்டப்பட்டு, தமிழனத்தின் துரோகிகளாக துரையப்பா, தியாகராசா, அருளம்பலம் உருவாக்கப்பட்டும் இடைத்தேர்தலில் தந்தை பெரும்பான்மை பலத்தில் வெற்றி கண்டார். இறுதியாக பலவீனமான இந்த மனிதர், அமரர்கள் ஜீ.ஜீ பொன்னம்பலம், தொண்டமான் போன்றோரின் இணக்கப்பாட்டுடன், தமிழினத்தின் எல்லோரினதும் உடன்பாட்டுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி வட்டுக்கோட்டை மாகாநாட்டிலே தமிழ் ஈழப் பிரகடனத்தை செய்து தமிழர்கள் தங்கள் தாயகத்தை பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை எல்லாரையும் உணரவைத்தார்.

தமிழினத்தின் இன்றைய விடுதலைப் பயணத்தை தொடக்கிவைத்தவர் தந்தை செல்வாவே. தமிழர்களுக்கு தாயகப் போராட்டத்தைத் தவிர வேறுவழியில்லை என்பதை நீதிப்படுத்தியவர் தந்தை செல்வாவே. குறைந்த பட்டசச் சலுலைகளையும் சிறிலங்கா அரசு தமிழினத்திற்கு ஒரு போதும் கொடுக்காது என்பதை வரலாற்று பதிவுகளாக, ஆவணங்களாக ஆக்கியவர் தந்தை செல்வாவே. ஒரு பலவீனமான ஓர் மனிதர் பலமான ஒரு தேசத்தின் விடுதலைக்கு அடிகோலியமை மட்டுமல்லாமல் இன்று விடுதலையை நடத்திச் செல்பவர்கள் ஏமாற முடியாதவாறு, சிங்களவர்களின் ஏமாற்று வித்தைகளை நிகழ்வுகளாகப் படம்பிடித்து தந்துள்ளார்.

எனவே தந்தை காலமாகாத புனிதராக தமிழர் வரலாற்றில் இடம்பிடித்து நிற்கின்றார். விடுதலை வீரரான மேசெயும், இறைவாக்கினர் எலியாவும் தாபோர் மலையில் இயேசுவோடு உரையாடிய காட்சி ஒன்று உண்டு என்றால், அவர்கள் ஜெருசலோசில் நிகழப் போவதைப் பற்றி உரையாடினார்கள் எனின், தந்தை செல்வா இலங்கைத் தீவின் தமிழ்பேசும் மக்களுக்காய் இறைவனிடம் பரிந்து பேசினார் என நான் நம்புகிறேன்.