கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீ 50,000 மக்கள் இடம்பெயர்வு

கலிபோர்னியாவில் காட்டுத்தீ பரவி  வருவதால், 50,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாநிலத்தில் அதிக வெப்பம் மற்றும் வரண்ட காற்று வீசி வருவதால், கடந்த புதன்கிழமை இரவு முதல் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது.

இதனால் முன்னெச்சரிக்கையாக சுமார் 2 இலட்சம் வீடுகளில் மின் இணைப்புகளை துண்டித்து, அதிகாரிகள் தீப்பற்றி எரியும் பகுதிகளை ஒட்டிய நகரங்களிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர்.

மேலும் ஹெலிகொப்டர், விமானங்கள் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட காட்டுத்தீக்கு 84பேர் பலியாகினர். மேலும் ஒரு இலட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின.  12ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நெருப்பில் நாசமாகின.