அவுஸ்திரேலிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களின் செயல்பாடு குறித்து கவலை தெரிவித்துள்ள சீனா, அம்முகாம்களை உடனடியாக மூடுமாறு வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு சீன நிறுவனமான ஹூவாயின் 5G தொலைத்தொடர்பு சேவையை வெளிப்படையாக அவுஸ்திரேலிய அரசு தடைசெய்ததை அடுத்து அவுஸ்திரேலிய மற்றும் சீனா இடையிலான உறவில் முறுகல் நிலை ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து கொரோனா கிருமித்தொற்றின் மூலத்தைக் குறித்து அறிய விசாரணை நடத்த வேண்டும் என அவுஸ்திரேலியா வலியுறுத்தியதும் அவுஸ்திரேலியா- சீனா உறவைப் பாதித்தாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அவுஸ்திரேலியா குறித்து சீனா சமர்பித்துள்ள அறிக்கையில், பெருமளவிலான அகதிகள், தஞ்சக் கோரிக்கையாளர்கள் காலவரையின்றி அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் முகாம்கள் அமைந்திருக்கக்கூடிய இடங்களை குறிப்பிடாத சீனா அதனை ‘மூன்றாம் நாடுகள்’ எனக் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற தஞ்சக் கோரிக்கையாளர்கள் நடுக்கடலில் இடைமறித்து பப்புவா நியூகினியாஇ நவுரு ஆகிய தீவுகளில் அவுஸ்திரேலிய அரசு தடுத்து வைத்தது. இவையே அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றன.