அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட நியூசிலாந்து நாட்டவர்கள் 

அவுஸ்திரேலியாவில் விசா விதிகளை மீறிய சுமார் 28 நியூசிலாந்து நாட்டவர்களை அவுஸ்திரேலிய எல்லைப்படை நாடுகடத்தி இருக்கிறது. இவர்கள் இரண்டு தனி விமானங்கள் வழியாக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டத்தின் கீழ் மோசமான குணநலன் கொண்டவர்களாக கருதப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் கொள்ளையடித்தல்,  சித்ரவதை, வீட்டு வன்முறை போன்ற குற்றங்களில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களாவர்.

இவர்கள் நாடுகடத்தப்படுத்துவதற்கு முன்னதாக அவுஸ்திரேலியாவின் பெர்த், பிரிஸ்பேன், சிட்னி, மெல்பேர்ன் ஆகிய பகுதிகளில் உள்ள குடிவரவுத் தடுப்பு மையங்களில் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு நபர் நல்ல குணநலன் கொண்டவராக இல்லையெனில், புலம்பெயர்வு சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நபரின் அவுதிரேலிய விசாவை இரத்து செய்யும் அதிகாரம் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.