ஐ.நா. விவகாரத்தை எதிர்கொள்ள தயார் – இலங்கை வெற்றி பெறும் என்கிறார் கெஹலிய

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரத்தை எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு;

“நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை இழந்தது. இதன் விளைவாக தற்போதைய அரசாங்கம் பல தடைகளை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

மேலும் சில குழுக்கள் இலங்கையை தற்போதைய விவகாரத்துக்கு இட்டுச்சென்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அதன் நடவடிக்கைகளுக்கு இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் உலகுக்கு பதிலளிக்கும். நல்லாட்சி அரசாங்கம் 30-1 தீர்மானத்தை அறிமுகப்படுத்தி, நாட்டுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதோடு இராணுவ வீரர்களை தண்டிப்பதாக உறுதியளித்தது.

எனவே பொய் சொல்லும் சர்வதேச சக்திகளுக்கும், உண்மையை சொல்லும் தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்தின் நேர்மைக்கும் இடையிலான மோதலில் இலங்கை நிச்சயம் வெற்றிபெறும்” என்றார்.