எவரையும் பழிவாங்காதீர்: சர்வதேசம் சும்மா விடாது! – இரா.சம்பந்தன்

அரசியல் ரீதியிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ எவரையும் கோட்டாபய அரசு பழிவாங்கக்கூடாது, அவ்வாறு இந்த அரசு செய்தால் சர்வதேசம் சும்மா விடாது எனவும் அதற்குரிய விபரீத விளைவுகளை இந்த அரசு சந்திக்க வேண்டியே வரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற நாள் முதல் இந்த அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் சர்வதேச நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் உற்றுநோக்கி வருகின்றன.

புதிதாக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள கோட்டாபய ராஜபக்சவும் அவர் தலைமையிலான அரசும் புதிய வழியில் பயணிக்க வேண்டும்.

நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில் அவர்கள் செயற்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

அதைவிடுத்துவிட்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அரங்கேறிய அருவருக்கத்தக்க சம்பவங்களில் கோட்டாபய அரசு ஈடுபடக்கூடாது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களையோ, ராஜபக்ச குடும்பத்தை விமர்சித்தவர்களையோ, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் கொலைக்குற்றங்களை அம்பலப்படுத்தியவர்களையோ கோட்டாபய அரசு அரசியல் ரீதியில் அல்லது தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கக் கூடாது.

அவ்வாறான செயலில் இந்த அரசு ஈடுபட்டால் சர்வதேசம் சும்மா விடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.