எல்லையில் சீனா படைகளை திரும்பப் பெறாதவரை இந்தியாவும் படைகளை திரும்பப் பெறாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்  அறிவிப்பு

எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியாவும் படைகளை திரும்பப்பெறாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பினரும் எல்லையில் தொடர்ந்து வீரர்களை குவித்து வருகின்றனர். இதனால் போர்ப் பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதைத் தணிக்க இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை வேகமாக உருவாக்கி வருகிறோம். ஆனால் நமது நாட்டின் சில கட்டமைப்புத் திட்டங்களுக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இந்தியா பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறது. எல்லையில் சீனா தனதுபடைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியாவும் படைகளை திரும்பப் பெறாது.

எல்லையில் இருக்கும் வீரர்களைக் குறைக்க முதலில் சீனா முன்வர வேண்டும். அவர்கள் முன்வராத வரை இந்தியாவும் தனதுவீரர்களை குறைக்காது.எனினும்,பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஒரு கிராமத்தை நிர்மாணித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. இதுபோன்ற உள்கட்டமைப்புகளை சீனா பல ஆண்டுகளாக உருவாக்கி வருகிறது. இந்தியா, சீன ராணுவ அதிகாரிகள் இடையேகடந்த 19-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இதுகுறித்து கடைசி நிமிடத்தில்தான் சீனா எங்களிடம் தகவல் தெரிவித்தது. இதனால் பேச்சுவார்த்தையை வரும் 24-ம்தேதிக்கு (இன்று) தள்ளிவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். பேச்சுவார்த்தை நடத்த இந்தியா எப்போதும் திறந்த மனதுடன் தயாராக உள்ளது”  என்றார்.