எந்த கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை ; காணாமல் ஆக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தலைவி

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் இன்று செவ்வாய்க்கிழமை தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எமது சங்கத்தின் பிரிவுத் தலைவியும் மகளிர் உரிமை செயற்பாட்டாருமான எஸ்.புவனேஸ்வரி திருக்கோவில் விநாயகபுரத்தில் அவரது இல்லத்தில் மக்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து அதில் நடடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பொரமுன கட்சியினை ஆதரிப்பதாக ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த விடயத்தை நான் முற்றாக மறுக்கின்றேன் கட்சி ஒன்றிற்கு ஆதரிப்பதாக கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்த பெண் எமது சங்கத்தின் சார்பாக உள்ள ஒரு பிரதேசத்;தின் சிறு பிரிவுத் தலைவர் இவரை தற்போது எமது சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளோம்.

இதேவேளை எமது சங்கமானது இதுவரை எந்தவொரு தரப்பினர்களுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ தேர்தலில் ஆதரிப்பதாக எந்தவொரு முடிவினையும் எடுக்கவில்லை. வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கமானது இவ்வாறான ஆதரவு நிலைப்பாட்டினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எடுக்க பொருத்தமான உரிய தீர்வுகளை எமது சங்கம் பெறும் என்ற நம்பிக்கையுடன் நாம் எமது பயணத்தை கொண்டு செல்கின்றோம்.