எந்த அரசியல்வாதியும் அக்கறையுடன் செயற்படவில்லை – காணாமல் ஆக்கப்படோரின் உறவுகள்

எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும்  உண்ணாவிரதம் இருக்கவுமில்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன்   கலந்துகொள்ளவுமில்லை என முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்றுடன் (27)  842 ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.இந்நிலையில் நேற்றையதினம்  (26.06.19 ) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள் .

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி கருத்து தெரிவிக்கையில் ,

இன்னும் சில நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு நடைபெற்றவிருக்கின்றது . கடந்த 40 ஆவது அமர்விலும் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை நாங்கள் இந்த போராட்டத்தினை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை அனைவரும் உணரவேண்டும் .

அந்தவகையில் எதிர்வரும் 30 .06 ஞாயிற்று கிழமை அன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தினை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடாத்தவுள்ளோம் . அன்றையதினம் காலை 10 மணிக்கு நடைபெறும் கவனயீர்ப்பில் எமக்காக குரல்கொடுக்கக்கூடிய அனைத்து தரப்பினரையும் ஆதரவுக்காக வேண்டிநிற்கின்றோம் .அனைவரும் வருகைதந்து போராட்டத்தில்  பங்குபற்றி எமக்கான நீதியை பெற்றுத்தருவத்துக்கு குரல்கொடுக்குமாறு வேண்டுகின்றோம் .

நாங்கள் இன்று பத்து ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை  தேடி வருகின்றோம். எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகழும்  உண்ணாவிரம் இருக்கவும் இல்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன்   கலந்துகொள்ளவும் இல்லை எங்களைப்பற்றி எடுத்து கதைப்பதற்கு கூட நாதியற்றவர்களாக நாம்  இருக்கின்றோம்.

இந்நிலையில், அண்மையில் கல்முனை பிரதேசத்தில் பிரதேச செயலக உயர்வுக்காக யாராரோ போராடி இருக்கின்றார்கள். இந்த நிலையில் எங்கள் அரசியல் பிரமுகர்கள் அந்த பிரச்சனையினை கையில் எடுத்து பேசினார்கள்.பிரதமருடன் பேசி அவர் சொன்ன தீர்வை பெற்றுக்கொண்டு கல்முனைக்கு ஓடினார்கள் அதேபோன்று  ஏன்  10 ஆண்டுகளாக நீதியை கோரியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டத்தினையும் மேற்கொண்டுவரும் எமக்காகவும் எமது போராட்டத்துக்காகவும் இதே பிரதமருடனும் அரசுடனும் பேசி போராட்டத்திற்கான நீதியினை அரசிடம் இருந்து ஒரு சின்ன பதிலாவது  பெற்றுக்கொண்டு எம்மிடம் எமது பிரதிநிதிகள் வரவில்லை ?? எமது உறவுகள் வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளார்கள்,படையினரிடம் ஒப்படைத்துள்ளோம்,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று பலதரப்பட்ட வித்தல் எங்கள் உறவுகள் காணப்படுகின்றார்கள்.

இவை அனைத்தும் எங்கள் அரசியல் தலைமைகளுக்கு தெரியும் அவர்கள் ஒரு சின்ன ஆறுதல் கூட எங்களுக்கு கூறவில்லை ஆனால் அவர்கள் சொல்கின்றார்கள் அதற்காகத்தான் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் கொண்டுவந்துள்ளோம் என்று சொல்கின்றார்கள் அரசின் நிகழ்ச்சி நிரலில் வந்த அந்த அலுவலகம் எம்மை ஏமாற்றுவதற்க்காகவும் உலகை ஏமாற்றுவதற்க்காகவும் கொண்டுவரப்பட்டது அதற்குள் எங்களை கொண்டுசென்று திணிக்ககூடாது.

உண்மையாக எங்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் எம்மையும் கவனியுங்கள்  எங்கள் வலியுடனும்,வேதனையுடனும் இதனை தெரியப்படுத்துகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.