உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் சுகாதாரத் தொழிலாளிகளும் நாளாந்தம் கொரோனாத் தொற்றுச் சூழ்நிலைகளில் நேரடியாகப் பணியாற்றுகின்றனர்.
அவர்களைப் புறந்தள்ளி என்ன கொள்கையின் படி தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேள்வியெழுப்பியபோது அரசின் அறிவிப்பில் உள்ளுராட்சி மன்ற சுகாதாரத் தொழிலாளிகளுக்கு தொற்றுத்தடுப்பு வழங்குமாறு தெரிவிக்கப்படவில்லை. அகவே வழங்கப்படவில்லை என மாகாண சுகாதார பணிப்பாளர் பதிலளித்தார்.
இன்று (02.02.2021) நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் கூட்டத்திலேயே தவிசாளரினால் இவ்வினா எழுப்பப்பட்டது. இவ் வினா எழுப்பப்பிட்டபோது, தவிசாளரின் கேள்வியை மறுத்து இவ்வாறான கேள்விகளைத்தொடுத்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம் என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.சாள்ஸ் தொவித்து தவிசாளரின் கேள்வியை மறுத்தார். எனினும் குறுக்கிட்டுப்பேசிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளுராட்சி மன்றங்களில் சுகாதாரத் தொழிலாளிகளாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கொரோனா தொற்று அபாயமுள்ள பல பணிகளை நேரடியாகத் தொடர்புற்று பணியாற்றுகின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்ட இல்லங்களில் கழிவுகளை அகற்றுகின்றனர். கொரோனா தொற்றாளர் வைத்தியசாலையான கோப்பாய் கல்வியற் கல்லூரியில் கூட பல சேவைகளை செய்கின்றனர். கொரோனாத் தொற்று சிகிச்சை நிலைய மலசல கூடக் குழிகள் நிரம்பினால் கூட பிரதேச சபை சுகாதாரத் தொழிலாளிகளே அகற்றியுள்ளனர்.
சாதாரணமாக சுகாதாரத்திணைக்களங்களில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கே கொரோனாத் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் பிரதேச சபைகளின் சுகாதாரப் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.