உள்ளுராட்சி சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து ஏன் வழங்கவில்லை? தவிசாளர் நிரோஷ் கேள்வி

உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் சுகாதாரத் தொழிலாளிகளும் நாளாந்தம் கொரோனாத் தொற்றுச் சூழ்நிலைகளில் நேரடியாகப் பணியாற்றுகின்றனர்.

அவர்களைப் புறந்தள்ளி என்ன கொள்கையின் படி தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேள்வியெழுப்பியபோது அரசின் அறிவிப்பில் உள்ளுராட்சி மன்ற சுகாதாரத் தொழிலாளிகளுக்கு தொற்றுத்தடுப்பு வழங்குமாறு தெரிவிக்கப்படவில்லை. அகவே வழங்கப்படவில்லை என மாகாண சுகாதார பணிப்பாளர் பதிலளித்தார்.

இன்று (02.02.2021) நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் கூட்டத்திலேயே தவிசாளரினால் இவ்வினா எழுப்பப்பட்டது. இவ் வினா எழுப்பப்பிட்டபோது, தவிசாளரின் கேள்வியை மறுத்து இவ்வாறான கேள்விகளைத்தொடுத்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம் என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.சாள்ஸ் தொவித்து தவிசாளரின் கேள்வியை மறுத்தார்.  எனினும் குறுக்கிட்டுப்பேசிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளுராட்சி மன்றங்களில் சுகாதாரத் தொழிலாளிகளாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கொரோனா தொற்று அபாயமுள்ள பல பணிகளை நேரடியாகத் தொடர்புற்று பணியாற்றுகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட இல்லங்களில் கழிவுகளை அகற்றுகின்றனர். கொரோனா தொற்றாளர் வைத்தியசாலையான கோப்பாய் கல்வியற் கல்லூரியில் கூட பல சேவைகளை செய்கின்றனர். கொரோனாத் தொற்று சிகிச்சை நிலைய மலசல கூடக் குழிகள் நிரம்பினால்  கூட பிரதேச சபை சுகாதாரத் தொழிலாளிகளே அகற்றியுள்ளனர்.

தொற்றாளர்கள் நடமாடிய சந்தேகத்திற்கு இடமான பகுதிகளை தொற்றுநீக்கம் செய்கின்றனர். ஆனால் அப்படியாகப் பணியாற்றும் தொழிலாளர்களை தொற்று மருந்தில் புறந்தள்ளுவது சரியான சுகாதார அணுகுமுறையல்ல. சகல சபைகளின் சுகாதாரப்பணியாளர்களுக்கும் மருந்து ஏற்றப்படவேண்டும்.
ஒரு சுகாதாரத் தொழிலாளி தொற்று சந்தேக இடத்தில் தற்செயலாக  தொற்றை வாங்குவதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் உள்ளன. வீதிகளில் தவறான முறையில் கழற்றி வீசப்படும் முகக் கவசங்களைக்கூட அகற்றும் பணியில் சுகாதாரத் தொழிலாளிகளே ஈடுபடுகின்றனர் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த மாகாண சுகாதார பணிப்பாளர் இலங்கைக்கு உலக சுகாதார தாபனம் மருந்துகளைக் கையளிக்கும் போது வரையரைகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்களின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு வழங்குமாறு தமக்குப் பணிக்கவில்லை என்றும் மருந்தினை பகிர்வது தமது முடிவு அல்ல அது அரசின் கொள்கை எனவும் பதிலளித்தார்.

சாதாரணமாக சுகாதாரத்திணைக்களங்களில் பணியாற்றும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கே கொரோனாத் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் பிரதேச சபைகளின் சுகாதாரப் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.