ஈழத் தமிழர்களுக்கு ஸ்டாலின் ஒன்றும் செய்யவில்லை – இராமதாஸ்

ஈழத் தமிழர் நலனுக்காக திமுகவை பொறுத்தவரை மு.க.ஸ்டாலின் எதையும் செய்ததும் இல்லை. செய்யப் போவதுமில்லை என பாமக தலைவர் இராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்ளுராட்சித் தேர்தலை சந்திக்க அஞ்சி தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு படையெடுத்த திமுக இப்போது ஒரு சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல் நடிக்கிறார்கள். திமுகவின் இந்த புதிய நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது. தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.

ஈழத் தமிழர் நலன்களுக்காக கடந்த 36ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த போதெல்லாம் துரும்பைக்கூட திமுக அசைக்கவில்லை. இது குறித்து தம்முடன் பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு ஸ்டாலின் தயாராக உள்ளாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈழத்தில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் திமுகவினரே ஆட்சியிலிருந்தனர். அப்போது, ஈழத் தமிழர்கள் நலன் பற்றி திமுகவினர் அக்கறை கொள்ளாதிருந்தனர் என்பதை உலக தமிழ் மக்களே நன்கறிவர்.