ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் – அமெரிக்கா

ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் அமுல்ப்படுத்தும்.  ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயலும். மத்திய கிழக்குப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர் தென்னாபிரிக்காவிற்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்வதற்கு ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து ஈரான், அமெரிக்கத் தூதரைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதே சமயத்தில் அமெரிக்கா இவ்வாறான அறிவிப்பை விடுத்திருக்கிறது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமிடையில் 2018ஆம் ஆண்டு தொடக்கம் மீண்டும் போர்ச் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், 2020 ஜனவரியில் ஈரானின் முக்கிய போர்த் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஈரான் இராணுவம், ஈராக்கில் இயங்கி வரும் அமெரிக்க இராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் நூற்றிற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயமடைந்தனர். 78 ஆண்டுகளில் நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும். இவ்விரு நாடுகளும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன.