இஸ்ரேலில் நெதன்யாகு ஆட்சி அகற்றப்பட்டு ஆட்சியமைக்கப் போகும் எதிர்கட்சிகளின் கூட்டணி

இஸ்ரேலில் ஆட்சிமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதால் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது.

எட்டு கட்சிகளின் புதிய கூட்ணி உருவாகி விட்டதாக மையவாத யேஷ் அடிட் கட்சியின் தலைவர் யேர் லேபிட் அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டணி சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன் படி வலதுசாரி யாமினா கட்சியின் தலைவர் நெஃப்தலி பென்னெட் முதலில் பிரதமராகப் பதவி ஏற்பார். பின்னர் லேபிட்டிடம் பிரதமர் பதவி ஒப்படைக்கப்படும்.

அரசு பதவியேற்பதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும்.

கூட்டணி உடன்பாடு குறித்து அதிபர் ரிவ்லினிடம் தெரிவித்து விட்டதாக தாம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் லேபிட் குறிப்பிட்டுள்ளார். தங்களுக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத இஸ்ரேலிய மக்களுக்குச் சேவையாற்றும் வகையில் அரசு செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.