இளையோருக்கு அதிகளவில் புற்றுநோய்கள் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது

புற்றுநோய்களால் இளம் வயதினர் பாதிக்கப்படுவது அண்மைக்காலங்களில் 79 விகிதத்தால் அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகமும், சீனாவின் செயின்ங் பல்கலைக்கழகமும் இணைந்து மெற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

1990 ஆம் ஆண்டுக்கும் 2019 ஆம் ஆண்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 50 வயதுக்கு உட்பட்டவர்களில் புற்றுநோய்கள் பரவுவது அதிகரித்துள்ளது.

அதிகமாக மது அருந்துதல், அதிக உடல்பருமன் போன்றவையே இதற்கான முக்கிய காரணகள். 2019 ஆம் ஆண்டில் 50 வயதிற்கு கீழ் உள்ள 1.8 மில்லியன் மக்கள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 79 விகிதம் அதிகம். மரணமும் 28 விகிதத்தால் அதிகரித்துள்ளது.

204 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 29 வகையான புற்றுநோய்கள் தொடர்பில் இந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். 14 வயது தொடக்கம் 49 வயது வரையிலானவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சில புற்றுநோய்கள் பரம்பரை மரபணுக்கள் மூலம் கடந்தப்படுகின்றன. ஆனால் சில அதிக இறைச்சி வகைகளை உள்ளெடுத்தல், மது, புகைத்தல், அதிக உப்பு பண்டங்களை உண்ணுதல், உடல் பருமன் அதிகரித்தல், அதிகளவில் மரக்கறி மற்றும் பழங்களை உள்ளெடுக்காததால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.