இலங்கை தென் பகுதியில் சீன இராணுவத்தினரா? வெளியாகியுள்ள செய்தியால் பரபரப்பு

சீன – இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ள திஸ்ஸமகாராமய வாவி துப்புரவு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தினர் அணிந்திருப்பதைப் போன்ற சீருடைகளை அணிந்த நிலையில் சிலர் பங்கேற்றமை சர்ச்சைக்குரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடனான செய்திகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்க இராணுவம் இலங்கையில் கால்தடம் பதிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய மிலேனியம் சவால் உடன்படிக்கை கடும் எதிர்ப்பு காரணமாக இரத்து செய்யப்பட்டது. எனினும், தென்பகுதியில் இத்தகைய சீருடையை அணிந்த வெளி நாட்டவர்களை வேலைத் தளங்களில் காண முடிகிறது எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இலங்கை மன்னரால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘திஸ்ஸமகாராமய வாவி சுத்தம் செய்யப்படுகிறது. மிகவும் விசித்திரமான ஒப்பந்தத்தில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்துக்கு இலங்கை அரசு கட்டணம் ஏதும் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திஸ்ஸமகாராமய வாவி துப்புரவு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தினர் அணிந்திருப்பதைப் போன்ற சீருடைகளை அணிந்த பங்கேற்றவர்கள் யார்? என்பது பேசு பொருளாகியுள்ளது. வாவி துப்புரவுப் பணி என்ற போர்வையில் இலங்கையில் என் நடக்கிறது? எனவும் அந்தச் செய்தி கேள்வி எழுப்பியுள்ளது.