இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்திலிருந்து மீனவர்கள் பேரணி

221 03 இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்திலிருந்து மீனவர்கள் பேரணி
இலங்கை சிறையில் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி, ராமேசுவரத்திலிருந்து பாம்பன் வரை நேற்று மீனவர்கள் பேரணி நடத்தினர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 3-ம் தேதி ராமேசுவரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது. கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 பேரை விடுதலை செய்த ஊர்க்காவல் துறை நீதிமன்றம், 2-வது முறையாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மெல்சன் என்பவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்தது.

இதைக் கண்டித்தும், மீனவர்களின் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரியும் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் கடந்த 17-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் தமிழக மீனவப் பிரதிநிதிகள், டெல்லியில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

வேலைநிறுத்தத்தின் 4-வது நாளான நேற்று ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து பேரணியாகச் சென்று, ராமநாதபுரம் ஆட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.அதன்படி நடைபெற்றஇந்தப் பேரணியில் பெண்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். பேரணி பாம்பனை அடைந்தபோது, ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் மீனவர்களை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகள் மூலம் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மீனவர்கள் அறிவித்தனர். மேலும், தமிழக மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் வரும் 23, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கப் போவதாகவும், மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டமும் தொடர்ந்து நடைபெறும் என்றும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.