இலங்கை குறித்து ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் விரைவில்: சம்பந்தனிடம் உறுதி

இலங்கை தொடர்பில் தமது நிலைப்பாடு மிக விரைவில் வெளிப்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வாக்குறுதியளித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக்பிராந்தியத்தின் நிர்வாக இயக்குநர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழுவினரே மேற்படி வாக்குறுதியைச் சம்பந்தனிடம் தெரிவித்தனர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடைமுறைகள் தொடர்பில் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தினார். இலங்கை அரசானது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்த காலத்தின்போது இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசு வழங்கியிருந்த போதும் அவற்றை நிறைவேற்றத் தவறியுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக இந்த வாக்குறுதிகள் கைவிடப்படலாகாது என்றும், போராட்டம் தமிழ் மக்களினுடையது, எனவே, ஒன்றிணைந்த, பிரிக்கமுடியாத, பிளவுபடாத நாட்டினுள் அதிகாரப் பரவலாக்கல் என்ற தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டும் என்றும் – இந்தச் சந்திப்பின் போது இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

இலங்கை அரசு கொடுத்த இந்த வாக்குறுதிகளை சர்வதேச சமூகம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும், இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அமைதியானது இலங்கை அரசு இந்த வாக்குறுதிகளில் இருந்து விலகிச் செல்வதற்கு இன்னும் ஊக்கத்தைக் கொடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் தீர்மானங்களை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றுவதை சர்வதேச சமூகம் உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திய இரா.சம்பந்தன், விசேடமாக இறுதிக்கட்டப் போரின்போது பாதுகாப்புத் தரப்பினரிடமும் அரச அதிகாரிகளிடமும் தங்கள் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்னும் உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அப்படியானவர்கள் காணாமல் போயிருந்தால் அதற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு உண்மை உறுதி செய்யப்படல் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். எமது மக்கள் இந்த உண்மையைக் கண்டுகொள்வதற்காக ஏங்கித் தவிக்கிறார்கள் என்றும், சர்வதேச சமூகம் இந்தக் கருமத்தில் உறுதியாகச் செயற்பட்டு உண்மையைக் கண்டறிய உதவ முன்வரவேண்டும் எனவும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கருமங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகள் மிக விரைவில் தாம் எடுக்கும் தீர்மானங்கள் மூலம் வெளிப்படும் என ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் இதன்போது வாக்குறுதியளித்தனர்” என இந்தச் சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.