இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தல்

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  வலியுறுத்தியுள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று  இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்கள் அத்து மீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.

இதனால் எமது மீனவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.போர்க் காலத்தின் போது எமது மீனவர்கள் குறுகிய கடல் பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்வாறான ஒரு பிரச்சினை உள்ள போது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்திய டேலர் படகுகள் உட்பட படகுகளுக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த விடயம் ஆராயப்பட வேண்டிய விடயம். வெளிப்படையாக இந்த விடயங்களை தெரிவிக்கின்ற போது தமிழ் நாட்டு மக்களுக்கும், எங்களுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தும் சூழ் நிலை காணப்படும்.தமிழ் நாட்டை பொறுத்த வகையில் எமது இனத்தின் பிரச்சினை சார்பாக பலர் தீக்குழித்து உள்ளனர்.

-பலர் தற்கொலை செய்துள்ளனர்.தமிழ் நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை முன் னெடுத்துள்ளனர்.அந்த வகையிலே எமது இனப்பிரச்சினைக்கு அவர்களின் குரல் இன்றியமையாதது.

-இவ்வாறு எமது தமிழ் நாட்டு மக்கள் எமது இனத்திற்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தீர்க்கப் போவதாக கூறுகின்ற இந்த சிறிய விடயங்களை கூறுகின்ற போது இரு தரப்புக்களும் கருத்துக்களையும் தெரிவிக்கின்ற போது இரு சமூகத்திற்கு இடையிலும் ஒரு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

எனவே இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் சிந்திக்க வேண்டும்.

ஆழ் கடல் மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தொடர்பில் இந்திய அரசுடன் பேசி இரண்டு தரப்பு மீனவர்களுக்கும் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இதனால் எல்லை தாண்டி வருகின்ற, மீன் பிடிக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

-இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.மன்னார் கடற் பிராந்தியத்தில் உள்ள பவளப் பாறைகள் இந்திய இலுவைப்படகுகளினால் அழிக்கப் படுகின்றது.

மீன் உற்பத்தியாகும் இடமாக குறித்த பாறைகள் உள்ள நிலையில் அவை அழிக்கப்படுகின்றது.

எனவே இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள ஆழ் கடல் மீன் பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பது சிறந்ததாக அமையும்.

-இரண்டு சமூகங்களுக்கு இடையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடுத்தக்கூடாது என தெரிவித்தார்.