இலங்கையில் நிலவும் அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அரசாங்கத்தின் வெளிப்படையான வேலைத்திட்டத்தால் சீன முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக சீனாவின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வாங் வென்டாவோ தெரிவித்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய போது இதனை தெரிவித்துள்ளார். சவாலான காலகட்டத்தில் இருநாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில், வர்த்தகம் மற்றும் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்கொள்ளும் போது இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க சீனா அரப்பணிப்புடன் செயற்படுவதாக சீன வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதே சீன வர்த்தக அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நிறைவுசெய்தல் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.



