இலங்கையின் முன்னாள் படையினா் 200 போ் ரஷ்ய எல்லைப் போரில் உயிரிழப்பு – தப்பிவந்தவா் தெரிவிப்பு

9 1 இலங்கையின் முன்னாள் படையினா் 200 போ் ரஷ்ய எல்லைப் போரில் உயிரிழப்பு - தப்பிவந்தவா் தெரிவிப்புஇலங்கையிலிருந்து பல குழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக சேர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் ரஷ்ய எல்லையில் உள்ள கொலைக் களங்களில் உயிரிழக்கின்றனர் என அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றின் பேட்டியில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், “இலங்கையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதே எண்ணிக்கையிலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்தாா்.

அவா் மேலும் தெரிவிக்கையில், “ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகளே என்னை ரஷ்ய உக்ரைன் போர் முனையில் பணியாற்ற தெரிவு செய்தனர். அதற்காக 1.6 மில்லியன் செலுத்தினேன் முகாமில் உதவியாளராக பணியாற்றும் வேலை என தெரிவித்தனர். இந்திய பிரஜையான ரமேஸ் என்பவரே இந்த நடவடிக்கைகளின் சூத்திரதாரி. ரஷ்யாவில் தமிழில் பேசிய ஒருவர் எங்களை வரவேற்றார். சுற்றுலா பயணிகளுக்கான விசாவில் செல்லும் இலங்கையர்களை வாக்னர் கூலிப் படையில் இணைத்துக் கொள்ளப்படுவதற்காக ரஷ்ய மொழி ஆவணமொன்றில் கைச்சாத்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவார்கள். சட்டத்தரணி போன்று தோற்றமளித்த இந்திய பெண் ஒருவர் எங்களிற்கு உதவினார். அவர் முகாம் உதவியாளராக பணிபுரிவதற்கான ஒரு வருட கால ஒப்பந்தம் என தெரிவித்தார்.

என்னையும் 33 இலங்கையர்களையும் ரொஸ்டொவ்வில் உள்ள முகாமிற்கு கொண்டு சென்றார்கள், அங்கு 14 நாட்கள் பயிற்சி அளித்தார்கள். நான் அந்த முகாமிலிருந்த வேளை 70 இலங்கையர்கள் காணப்பட்டனர். சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். அதே எண்ணிக்கையானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் நாளாந்தம் பத்து அல்லது 15 சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுகின்றன ஒரு கிழமைக்குள் கடவுச்சீட்டு விசாவுடன் கிடைக்கின்றது. அடுத்த சில நாட்களில் அவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படுகின்றனர்” எனவும் அங்கிருந்து தப்பிவந்த முன்னாள் படைவீரர் தெரிவித்துள்ளார்.