இராணுவ மயமாக்கலை நோக்கி நாடு வேகமாகச் செல்கின்றது – தலதா அத்துக்கொரல

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவ மயமாக்கலை நோக்கிச் செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை அமைச்சு நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளமையைச் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு கிராம உத்தியோகத்தர் முதல் மாவட்ட செயலாளர்கள் வரையிலான அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்றமை இதுவே முதல் முறை என்றும் 25 மாவட்டங்களுக்கும் பாதுகாப்பை மேற்பார்வையிட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் எதிர்காலத்தில் இராணுவ அதிகாரிகள் கிராம சேவகர் பிரிவுகளுக்கும் அமைச்சின் செயலாளர்களாகவும் நியமிக்கப்படவாய்ப்புகள் உள்ளன என்றும் தலதா அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனாத் தொற்றினால் 11 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளும் 20 ஆயிரம் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ள உக்ரேனில் இருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்கின்றமை தொடர்பாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தலதா அத்துகோரல அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். நிதி பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கையால் தங்கள் சொந்த பாரம்பரிய இடங்களைப் பார்வையிட நாட்டு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.