இந்திய பாதுகாப்புத் தகவல்களை சீனாவிற்கு விற்ற இந்தியப் பத்திரிகையாளர் கைது

இந்தியாவின் எல்லைப் பிரச்சினை தொடர்பான முக்கிய தகவல்களை சீனாவிற்கு வழங்கியதாக இந்தியப் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து பணம் கொடுத்து தகவல்களைப் பெற்று சீன உளவுத்துறைக்கு கடத்த முயன்ற சீனப் பெண் மற்றும் அவரின் நேபாள உதவியாளர் ஆகியோரும் டெல்லிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா என்பவராவார். இவர் பல்வேறு நாளேடுகளில் பணியாற்றியிருந்தார். தற்போது எந்த நாளேட்டிலும் பணியாற்றாது சுயமாக எழுதி வருகின்றார். சீனாவிள் ‘ தி குளோபல் டைம்ஸ்’ என்ற நாளேட்டில் எழுதி வருகின்றார்.

இவர்களின் கைது குறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்களில், “இந்தியப் பாதுகாப்புத்துறை தொடர்பான தகவல்கள், எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் சீனாவிற்குக் கடத்தப்படுவதாக கடந்த 14ஆம் திகதி உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.

இதன் அடிப்படையில், டெல்லி பிதாம்புரா பகுதியில் வசித்து வரும் பத்திரிகையாளர் ராஜீவ் சர்மாவை நேற்று(18) கைது செய்துள்ளோம். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சீனப் பெண் ஒருவர், நேபாள நாட்டைச் சேர்ந்த அவரின் உதவியாளர் ஒருவர் என அவர்களையும் கைது செய்தோம்.

ராஜீவ் சர்மாவின் வீட்டிலிருந்து இந்தியப் பாதுகாப்புத்துறை தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளோம்.

கைதான சீனப் பெண் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்து வந்தார்.

ராஜீவ் சார்மாவை கடந்த 2016ஆம் ஆண்டு சீனாவின் உளவுத்துறை அதிகாரிகள் அணுகியுள்ளனர். அதன் பின் சீன உளவுத்துறை அதிகாரிகளுடன் சர்மாவிற்கு தொடர்புகள் ஏற்பட்டது.

ராஜீவ் சர்மா வழங்கும் ஒவ்வொரு தகவல்களுக்கும் ஆயிரம் அமெரிக்க டொலரை சீனா அவருக்கு வழங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பல்வேறு பாதுகாப்புத் தகவல்களை சீனாவிற்கு அவர் வழங்கியுள்ளார்” என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.