இந்தியாவில் தயாராகும் நோவாவேக்ஸ் கொரோனா தடுப்பூசி 90% பலனளிக்கும்

இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் தயாராக இருக்கும் இரண்டாவது தடுப்பூசியான நோவோவேக்ஸ்(Novavax Joins Vaccine) 90.4 சதவிகிதம் அளவுக்குப் பலனளிக்கும் என மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளில் தெரியவந்திருக்கிறது.

குறைந்த மற்றும் மிதமான பாதிப்புகளை 100 சதவிகிதம் அளவுக்கு தடுக்கும் என்றும் அந்த நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்டில் இருந்து இயங்கும் நோவாவேக்ஸ் நிறுவனம் அமெரிக்காவிலும் மெக்சிகோவிலும் 29,960 பேரிடம் தடுப்பூசியைப் பரிசோதனை செய்தது.

இதற்காக 119 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பயன்பாட்டு அனுமதிக்காக விண்ணப்பிக்க இருப்பதாக நோவாவேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் சுமார் 10 கோடி டோஸ்களை தயாரிக்க இருப்பதாகவும் ஆண்டு இறுதிக்குள் இது 15 கோடியாக அதிகரிக்கப்படும் என்று நம்புவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் ஏழை நாடுகளுக்கு நூறு கோடி டோஸ்களை தயாரித்து வழங்கவும் நோவேவேக்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

கொரோனா புரத நீட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தடுப்பூசியை கோவோவேக்ஸ் என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

நன்றி – பிபிசி