இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகள் எதனையும் ஏற்கமுடியாது – சுரேஷ்

“இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்தச் செயல்பாடுகளையும் ஈழத் தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“இந்து பசுபிக் பிராந்தியத்தில் தனது இராணுவ மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள சீனா எடுத்திருக்கும் முயற்சிகளும், சீனாவின் மையப்புள்ளியாக ஓர் முக்கியமான இடத்தில் இலங்கை இருப்பதால், இலங்கையைப் பயன்படுத்த சீனா எடுக்கும் முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கவலை கொண்டிருக்கின்றன.

இது வெவ்வேறு பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும் என அந்நாடுகள் கருதுகின்றன. வடக்கு – கிழக்கு என்பது இந்தியாவுக்கு அண்மையிலுள்ள பிரதேசம் என்பதும், இதற்குள் சீனா வெவ்வேறு பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றைக் காட்டி வருவதென்பது இந்தியாவுக்கு மேலும் பாதிப்பைத் தான் உருவாக்கும். இதனை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தக் கூடாது. தமிழ் அரசியல் கட்சிகள் இது தொடர்பில்மிகத் தெளிவான சிந்தனைக்கு வரவேண்டும்” என்றார்.