சிறீலங்கா அரசின் இனஅழிப்பு சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் முகமாக சிறீலங்கா படையினரும், யாழ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிர்வாகமும் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுச் சின்னத்தை இன்று (9) அதிகாலை அழித்தது தொடர்பில் கனேடிய அரசியல் தலைவர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
மிகவும் துன்பமானது, இது தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பில் மேற்கொள்ளப்படும் கொடுமையான வன்முறை. இதனை எல்லா அரசியல் தலைவர்களும், மனித உரிமைகளுக்காக பேராடும் எல்லா அமைப்புக்களும் கண்டிக்க வேண்டும் என கனடா, ஒன்ராரியோ மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் குராடான் சிங் தெரிவித்துள்ளார்.
பல பத்தாயிரம் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதை நினைவுகூரும் முகமாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை அழித்தது என்பது கட்டமைக்கப்பட்ட ஒரு இனஅழிப்பாகும். கனடா மற்றும் அனைத்துலக சமூகம் இத்தகைய நடவகடிக்கைகளை நிறுத்துவதற்கு முன்வரவேண்டும் என பிராம்டன் நகரத்தின் முதல்வர் பற்றிக் பிரவுன் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரும் சின்னத்தை அழிப்பது என்பதும் அவர்களின் வரலாற்றை அழிக்கும் ஒரு இனஅழிப்பாகும். யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட இந்த சின்னத்தை அழித்தது தொடர்பான செய்தி கேட்டு நான் வருத்தம் அடைந்தேன் என பிரம்டன் நகரத்தின் நகரசபை உறுப்பினர் மாட்ன் மெடிறோஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் வரலாற்றை அழிக்கும் இந்த நடவடிக்கை என்பது இனஅழிப்பின் ஒரு பகுதியாகும் என பிரம்டன் நகர சபையின் உறுப்பினர் ஹர்கிரட் சிங் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் வரலாற்றை அழிக்கும் நிகழ்வு துன்பமானது, இதுவும் சிறீலங்கா அரசின் குற்றமான நடவடிக்கை, இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்றால் சிறீலங்காவில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என ஸ்காபுறோ பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
பல பத்தாயிரம் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூர்வதற்காக அமைக்கப்பட்ட சின்னத்தை சிறீலங்கா அரசு அழித்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என ஸ்காபுறோ பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.