இங்கிலாந்தில், கன்டெயினரில் கண்டெடுக்கப்பட்ட 39 மனித உடல்கள்

இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரே கென்டெயினர் லொறியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களில் 38பேர் பெரியவர்கள் என்றும் ஒருவர் பதின்ம வயதைச் சேர்ந்தவர் என்றும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் தனது ருவிற்றர் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு மோசமான சம்பவம். திகைத்துப் போயிருக்கின்றேன். இந்தச் சம்பவம் குறித்து, பொலிசாரிடம் தொடர்ந்து தகவல்களை கேட்டு வருகின்றேன். அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பொலிசாரிடம் இணைந்து என்ன நடந்தது என்பதை உன்னிப்பாக விசாரித்து வருகின்றனர்.

எனது எண்ணம் எல்லாம் உயிரிழந்தவர்கள் பற்றியும், அவர்களின் அன்புக்குரியவர்களை பற்றியுமானதாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

உயிருடன் யாரேனும் மீட்கப்பட்டுள்ளனரா என்று இதுவரை காவல்துறை எந்தத் தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

இறந்தவர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகளுக்கு நீண்ட நேரம் ஆகலாம் என்றும் ஆன்ட்ரூ மரைனர் எனும் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

kent 39 bodies2 இங்கிலாந்தில், கன்டெயினரில் கண்டெடுக்கப்பட்ட 39 மனித உடல்கள்அந்த வாகனத்தின் ஓட்டுநர் கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதாகும் அந்த நபர் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்தவர்.

பல்கேரியாவில் இருந்து வந்த இந்த வாகனம் ஹோலிஹெட் என்னும் இடத்தின் வழியாக இங்கிலாந்திற்குள் நுழைந்ததாக எஸ்ஸெக்ஸ் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளுர் நேரப்படி அதிகாலை 1.40 மணிக்கு ஈஸ்டர்ன் அவனியூ எனும் இடத்தில் உள்ள வாட்டர் கிலேட் தொழிற் பூங்காவில் இந்த இறந்த உடல்கள் அடங்கிய கென்டெயினர் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போது அந்த இடம் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு அந்த தொழிற்பூங்காவிற்குள் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதேபோல ஜுன் 2000இல், சீனக் குடியேறிகள் 58பேர் மூச்சுத் திணறி இறந்த நிலையில் டோவர் என்னும் இடத்தில் கென்டெயினர் லொறி கண்டெடுக்கப்பட்டனர்.

கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாக அந்த வாகனத்தின், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் அடுத்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.