இங்கிலாந்தின் வின்செஸ்டர் பல்கலைக்கழகம் தங்களது வளாகத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கிற்கு சிலையை நிறுவியிருப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் கடந்த 2019ம் ஆண்டு ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் தலைவர்களிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவர் உலகம் முழுவதும் பிரபலமானார். அத்துடன் பல்வேறு தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில், இங்கிலாந்தின் வின்செஸ்டர் பல்கலைக்கழகம் கிரெட்டா துன்பெர்க்கின் சிலையை தங்களது வளாகத்தில் நிறுவியுள்ளது. இதன் மதிப்பு தோராயமாக இந்திய மதிப்பீட்டில் ரூ.24 இலட்சம் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வெளிவர முடியாமல் தவித்துவரும் இந்த சூழலில் கிரெட்டா துன்பெர்க்கிற்கு இவ்வளவு மதிப்பில் சிலை அமைத்திருப்பது ஏன் என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் அவர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.