ஆஸ்திரேலியாவில் நடந்த குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களாக கருதப்பட்ட நியூசிலாந்தை சேர்ந்த 31 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோரின் விசா ஆஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டம் 1958 கீழ் உள்ள 501 பிரிவின் கீழ் இரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது குணநலன் அடிப்படையில் இவர்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்க தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றது.
இதில் நாடுகடத்தப்பட்ட 31 பேரில் 30 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார். இவர்கள் குடும்ப வன்முறை, குழந்தைகளை தவறான பயன்படுத்துதல், பாலியல் குற்றங்கள், கொள்ளை, கடத்தல், போதை மருந்து குற்றங்கள் போன்றவற்றில் தொடர்புடையவர்களாகக் கருதப்படுகின்றது.
“கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட மற்றும் குணநலன் ரீதியாக தகுதிப் பெறாத ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் ரத்து செய்யப்பட்டு அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருக்க தகுதியற்றவர்களாகிறார்கள். கொரோனா காரணமாக சர்வதேச பயணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் தகுதியற்ற வெளிநாட்டவர்களை ஆஸ்திரேலியாவிலிருந்து எல்லைப்படை வெளியேற்றி வருகிறது,” என இந்த நாடுகடத்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளார் எல்லைப்படை தற்காலிக தளபதி Sally McAuliffe.
அத்துடன், ஆஸ்திரேலிய சமூகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் பணி தொடர்ந்து நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.