அவுஸ்திரேலியா: தமிழ் அகதி குழந்தைக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தல்

அவுஸ்திரேலிய அரசினால் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அகதி குழந்தையான தருணிகா மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைப்பாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அக்குழந்தைக்கு ஆதரவாக பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இக்குழந்தைக்கு ஆதரவாகவும் இக்குழந்தைக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் Home to Bilo மற்றும் Refugee Rights Action Network அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தும் அமைதியானப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

முன்னதாக கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பம் அகதிகளாக தகுதிப் பெறவில்லை என்றும் அவுஸ்திரேலியா தனது வலுவான எல்லைக் கொள்கையை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் அவுஸ்திரேலிய தேசியக் கட்சியின் மேலவை உறுப்பினர் மேட் கேனவன்.

அவுஸ்திரேலிய அரசால் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பமான பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவரது குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் இப்படியொரு கருத்தை அவர் முன்வைத்திருக்கிறார்.