அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைகளில் இல்லை – உறுதிபடக் கூறுகிறார் நீதி அமைச்சர்

அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல வினாக்களுக்குப் பதிலளிக்கும் நேரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் சுரேன் ராகவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நீதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலரே சிறைகளில் உள்ளனர். எனினும் எந்தவித வழக்கும் தொடராது நீண்டகாலமாக இவர்களுக்கு பிணை வழங்காது தடுத்து வைக்கவும் முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.