அரசாங்கத்தின் தடையை மீறி ஜே.வி.பி. மேதினம் நடக்கும் – அநுரகுமார திட்டவட்டம்

மேதின பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருக்கின்ற போதிலும், திட்மிட்டவாறு தமது மேதினப் பேரணி அரசாங்கத்தின் தடையையும் மீறி நடைபெறும் என ஜே.வி.பி. அறிவித்திருக்கின்றது.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் நேற்று உரையாற்றிய ஜே.வி.பி.யின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

மேதினக் கூட்டங்கள் பேரணிகளை அரசாங்கம் தடை செய்தமைக்கு கொரோனா பிரச்சினை காரணமல்ல. இதற்குப் பின்னணியில் அரசியல் காரணங்களே உள்ளது என்பது வெளிப்படை எனவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் காரணங்களுக்காக மேதினப் பேரணிகளை அரசாங்கம் தடை செய்திருப்பதால், அதற்குத் தாம் கட்டுப்படப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். மேதினப் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஜே.வி.பி.யினால் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.