அமைச்சா் அலி சப்ரி தலைமையிலான குழு ஜெனீவா செல்கிறது – ஆணையாளரின் அறிக்கை மாா்ச் 4 இல்

இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றை நாட்டில் அமுல்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடரின் போது அவை கவனத்தில் கொள்ளப்படுமென மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்கள், மார்ச் மாதம் 4 ஆம் திகதி கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதன்போது ஆணையாளரின் வாய்மூல விளக்கமளிப்பும் இடம்பெறவுள்ளது.

கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வெளிவிவிகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று மார்ச் முதல் வாரத்தில் ஜெனிவா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் மனித உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளில் இலங்கை அடைந்துள்ள இலக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்க உள்ளதாக அமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் இம்முறை இலங்கை அரசாங்கத்தின் மீது சில அழுத்தங்களை மனித உரிமைகள் பேரவை பிரயோகிக்கும் என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.