அமெரிக்கத் தளங்கள் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

ஈராக்கின் தலைநகர் பக்தாதுக்கு வடக்கே அமெரிக்க படைகள் தங்கியுள்ள அல் பலாத் இராணுவ முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் ஈராக்கைச் சேர்ந்த நான்கு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக ஈராக் அரச வானொலி அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த முகாம் மீது 6 ஏவுகணைத் தாக்குதல்கள் நேற்று முன்தினம் (12) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க படை அதிகாரிகள், எப் 16 ரக விமான இயங்கு தளம் என்பன உள்ள முக்கிய தளமாக இந்த இராணுவ தளம் காணப்படுகின்றது.

இந்த ஏவுகணைத் தாக்குதலில் முகாமுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லையென கூறப்படுகின்றது. இருப்பினும், ஈராக்கிலுள்ள ஈரான் அனுசரணையில் இயங்கும் ஆயுதக் குழுக்கள் மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன