அத்துமீறும் இந்திய மீனவர்களின் படகுகளை அழித்துவிடுங்கள் – பொது மீனவர் சம்மேளனம் வலியுறுத்தல்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகளை அழித்துவிடுமாறு அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீன்பிடி படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் கடற்றொழில் அமைச்சர் கூறியிருந்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் உரிமை இதன் மூலம் மீறப்படும் . கடற்றொழில் அமைச்சர் அவரின் கூற்றை மீளப்பெற வேண்டும்.

இந்திய மீனவர்களுக்கு தமது கடற்பரப்பிற்கு அப்பால் சென்று இலங்கையின் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்குரிய அனுமதியைப் பெற்றுத் தருவதாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரங்களின் போது உறுதியளித்துள்ளார்.

எமது கடல் எல்லைக்குள் அவர்களின் படகுகள் பிரவேசிக்கும் போது அந்தப் படகுகளை அரசுடைமையாக்குவதற்கும் அவர்களுக்கு அபராதம் அறவிடவும் எமது நாட்டிற்கு அதிகாரமுள்ளது.

சட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது என்ன நடைபெறுகிறது? அவற்றை அரசுடைமையாக்கி பின்னர் விடுவிக்கின்றனர். பிறந்த தினங்களில் அல்லது சுத்திர தினங்களில் விடுவிக்கின்றனர். வடக்கில் மீனவர் சங்கங்களிடம் மீனவர்களுக்கு வழங்குவதங்கு படகுகள் இல்லை. முடியாவிட்டால் அந்த அனைத்து படகுகளையும் அழித்துவிடுங்கள். அல்லது மீன்கள் இனப்பெருக்க நிலையங்களில் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக படகுகளை மூழ்கடித்து விட முடியும் அல்லவா? எனவே அரசாங்கம் விரைவில் அது தொடர்பிலான நிலைப்பாட்டை வௌியிட வேண்டும்” என்றார்.