அகதிகள் தங்கள் குடும்பத்தைச் சேர்க்கத் தடை! – யேர்மனிய எதிர்க்கட்சி தேர்தல் வாக்குறுதி!

யேர்மனியின் தீவிர வலதுசாரிக் கட்சி அதன் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது. குடியேற்றத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கடுமையாக எதிர்த்துவருகின்ற ஏஎப்டி (Alternative für Deutschland-AfD) கட்சி, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான தனது வாக்குறுதிகளில் அகதிகளுக்கு எதிரான கடும் நிலைப்பாடுகளை அறிவித்துள்ளது.

‘இயல்பான யேர்மனி’ (‘Germany. But normal.’) என்ற அர்த்தம் கொண்ட சுலோகத்தின் கீழ் அக்கட்சி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து யேர்மனியை வெளியேற்றுகின்ற டெக்ஸிட் (DEXIT) எனப்படும் கொள்கையையும் அது மீள உறுதிப்படுத்தி உள்ளது.

யேர்மனியில் உள்ள அகதிகள் தங்களோடு தங்களது குடும்பத்தவர்களை இணைத்துக் கொள்வதை முழுமையாகத் தடை செய்யும் முடிவை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது சேர்த்துள்ளது. அவசியமான நிலைமைகளில் அகதி ஒருவர் தனது குடும்பத்தினருடன் இணையலாம் என்ற அதன் முந்திய நிலைப்பாட்டை அக்கட்சி மாற்றி உள்ளது.

அதிபர் மெர்கலின் அரசு முன்னெடுத்து வருகின்ற கொரோனா சுகாதாரக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக எதிர்த்து வருகின்ற அக்கட்சி, பொதுமக்கள் ஒன்று கூடும் உரிமைகளைத் தடை செய்கின்ற சகல கட்டுப்பாடுகளையும் நீக்குமாறு கேட்டிருக்கிறது.

யேர்மனியில் கொரோனா வைரஸ் சுகாதாரக் கட்டுப்பாடுகள் மீது நாட்டு மக்களுக்கு உள்ள வெறுப்பை தனது வாக்குகளாக மாற்றும் உத்தியை அக் கட்சி கடைப்பிடித்து வருகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கடந்த 16 ஆண்டுகளில் அதிபர் அங்கெலா மெர்கல் இல்லாது நடைபெறவுள்ள முதலாவது தேர்தல் இதுவாகும். 2015 இல் அதிபர் மெர்கல் கட்டுப்பாடு ஏதும் இன்றி சிரிய அகதிகளை நாட்டுக்குள் அனுமதித்ததன் விளைவாக எழுந்த எதிர்ப்புகளை அகதிகளுக்கு எதிரான கொள்கையைக்  கொண்ட ஏஎப்டி கட்சி தனக்கான பெரும் அரசியல் முதலீடாக மாற்றிக் கொண்டது. 2017 இல் நடைபெற்ற தேர்தலில் 13 வீதமான வாக்குகளை வென்று நாடாளுமன்றத்தில் பெரிய எதிர்க்கட்சியாக மாறியது.

2013 இல் தொடங்கப்பட்ட ஏஎப்டி கட்சிக்கு தற்போது நாடாளுமன்றத்தில் (Bundestag) 89 உறுப்பினர்கள் உள்ளனர். கடைசியாக வெளியாகி இருக்கின்ற கருத்துக் கணிப்புகள் அக்கட்சி இந்த முறை 10-12 வீத வாக்குகளையே பெறும் என்று எதிர்வு கூறியுள்ளன. புதிய தலைவருடன் தேர்தலை எதிர்கொள்கின்ற அங்கெலா மெர்கலின் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்கு 27 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.