மக்கள் மனு வட-கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு, மனோ கணேசனுடன் சந்திப்பு

WhatsApp Image 2024 03 22 at 11.27.48 AM மக்கள் மனு வட-கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு, மனோ கணேசனுடன் சந்திப்புதமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியை, வடக்கு கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழு சந்தித்து உரையாடியது. கொழும்பில் மனோ கணேசன் எம்பியின் இல்லத்தில், இன்று நிகழ்ந்த இந்த சந்திப்பில் மக்கள் மனு குழுவின் சார்பில் இணைப்பாளர் ஏ. ஜதீந்திரா, எஸ்.எஸ். குகநாதன், எஸ். மகாலிங்கசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இதுபற்றி ஊடகங்களுக்கு கூறியதாவது,  

எமது சந்திப்பு மிக காத்திரமாக நடைபெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிங்கள பிரதான கட்சி வேட்பாளர்கள் அல்லது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சிங்கள பிரதான கட்சி தலைவர்களுடன், தமிழ் தேசிய பிரச்சினை தொடர்பில், மாகாணசபைகள் என்ற அடிப்படையில் பொது குறைந்த பட்ச உடன்பாட்டை காண்பது தொடர்பில் கலந்து உரையாட பட்டது.  

வ/கி மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுடன், குறைந்த பட்ச உடன்பாட்டை காணும் சிங்கள பிரதான கட்சிகள், தலைவர்கள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அந்த உடன்பாட்டை இடம் பெற செய்ய வேண்டும் என கலந்து உரையாடினோம். எதிர்வரும் தேர்தல், பாராளுமன்ற தேர்தலா, ஜனாதிபதி தேர்தலா, அவ்வாராயின் சிங்கள பிரதான கட்சி வேட்பாளர்கள், பொது தமிழ் வேட்பாளர் ஆகிய விடயங்கள் பற்றியும் கலந்து உரையாடினோம்.

“வாக்களியுங்கள், ஆட்சிக்கு வந்த பிறகு பார்ப்போம்” என்ற நிலைபாட்டுடன் தமிழ் மக்கள் மத்தியில் வந்து வாக்கு கோர சிங்கள பிரதான கட்சிகள், கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோருக்கு இனிமேல் இடம் தர முடியாது என்ற பொது நிலைபாட்டை பற்றியும் உரையாடினோம்.  

தமிழ் முற்போக்கு கூட்டணியால், மலையக தமிழர் தொடர்பில் சமூக நீதி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை அடிப்படையாக கொண்டு அனைத்து சிங்கள பிரதான கட்சிகளுடன் தமுகூ கலந்து உரையாட திட்டமிட்டுள்ளது. எமது ஆவண நிலைப்பாடுகள், அவ்வந்த கட்சிகளின் மற்றும்  வேட்பாளர்களின்  தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம் பெறுவதை பொறுத்தே எமது நிலைப்பாடு அமையும் என்ற முடிவை நாம் ஏற்கனவே எடுத்துள்ளோம் என்பதை நான்,  வ/கி மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு எடுத்து கூறினேன்.

ஈழத்தமிழ் சகோதரர்களின் குறைந்த பட்ச அபிலாஷைகளை நடைமுறை சாத்தியமான முறைஇல் விட்டுக்கொடுக்காமல் முன் எடுக்கும் வடக்கு கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனவும் நான் உறுதி அளித்தேன்”  என மனோ கணேசன் தெரிவித்தாா்.