வத்திக்கானிடம் பதவி நீடிப்பு கோருகின்றார் மல்கம் ரஞ்சித் – ஈஸ்டா் தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை பதவியிலிருக்க திட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தனது சேவையை நீடிக்குமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருந்தாலும், அவர் கோரிய சேவை நீடிப்பு இதுவரை கிடைக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை வட்டாரத்தில் அறிய முடிகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசாநாயக்க மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர், ரஞ்சித் ஆண்டகையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

“தேர்தலொன்று நெருங்கிவரும் சூழலில் கத்தோலிக்க மக்களை பகடைக்காயாக பயன்படுத்தும் நோக்கில் இந்த விடயத்தில் அரசியல் இலாபம் தேடபார்க்கும் சிலரது பேச்சுகளை கேட்டு ரஞ்சிம் ஆண்டகை செயல்படுகிறார்” என இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயும் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தப் பின்புலத்திலேயே பேராயர் பதவியை நீடிக்குமாறு கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

80 வயதாகும் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பேராயராக தொடர்வதற்கான அனுமதியை பாப்பரசர் மாத்திரமே வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.