பலஸ்தீன முன்னணி தளபதி இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

காசாவில்  பலஸ்தீன போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் முன்னணி தளபதி பஹா அபு அல்- அத்தா இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பதில் நடவடிக்கையாக அந்த போராட்டக் குழு டெல் அவிவ் உட்பட இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகளை வீசியுள்ளது.

டமஸ்கஸில் இருக்கும் பஹா அபு அல்- அத்தா வின்    வீட்டை இலக்குவைத்தும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அந்த அதிகாரியின் மகன் உட்பட இருவர் கொல்லப்பட்டதாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இது பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு இஸ்ரேல் மறுத்துள்ளது.

“காசா மற்றும் சிரியாவில் இஸ்ரேல் ஒருங்கிணைந்து நடத்திய தாக்குதல் ஒரு யுத்தப் பிரகடனம்” என்று இஸ்லாமிய ஜிஹாத் தலைவர் காலித் அல் பட்டிஷ் குறிப்பிட்டுள்ளார். காசாவில் கொல்லப்பட்ட பாஹா அபூ அல் அத்தாவின் இறுதிச் சடங்கில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் அத்தாவின் மனைவியும் கொல்லப்பட்டுள்ளார். காசா நகரின் ஷெஜய்யாவில் உள்ள அத்தா வசித்து வந்த வீடு தாக்குதலால் சீர்குலைந்துள்ளது. மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு, அத்தாவின் மரணத்திற்கு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதில் சிரிய தலைநகரில் தமது அரசியல் பிரிவு தலைவர் அக்ரம் அல் அஜூரி இலக்கு வைக்கப்பட்டுள்ளார் என்று இஸ்லாமிய ஜிஹாம் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பல ஏவுகணைகளை பயன்படுத்தியே சிரிய தலைநகர் டமஸ்கஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சிரியா அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதில் ஒரு ஏவுகணை சுட்டு வீழ்த்திப்பட்டதாகவும் அது கூறியது.727de35055a048ebabd02fe42c4d6488 18 பலஸ்தீன முன்னணி தளபதி இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இரண்டு மாடி கட்டடம் ஒன்று முழுமையாக தரைமட்டமாகி இருப்பதாக அங்கிருக்கும் ரோய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் விபரித்துள்ளார். இந்த தாக்குதல் சத்தங்களால் அதிகாலை நான்கு மணி அளவில் தான் விழித்ததாக குறிப்பிட்டிக்கும் அண்டை வீட்டார் ஒருவர், தொடர்ச்சியான மூன்று குண்டு வெடிப்புகளால் தனது வீட்டுக் கதவு திறந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்த பலஸ்தீன போராட்டக் குழு பல டஜன் ரொக்கெட் குண்டுகளை இஸ்ரேலை வீசி இருப்பதோடு வடக்காக தொலைதூரத்தில் டெல் அவிவிலும் சைரன் ஒலி எழுப்பப்பட்டுள்ளது. அங்கு பல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

பல ரொக்கெட் குண்டுகளை வான் பாதுகாப்பு இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் பலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலிய மருத்துவமனைகள் குறிப்பிட்டுள்ளன.