இஸ்ரேல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான அல்ஜசீரா ஊடக கட்டடம்

இஸ்ரேல் – பாலஸ்தீனிய மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. காஸாவில் அல் ஜஸீரா(Al Jazeera) மற்றும் அமெரிக்காவின் ஏ.பி.(Associated Press) போன்ற சர்வதேச செய்தி ஊடகங்கள் இயங்கிய 13 மாடிக் கட்டடம் (Jala Tower) மீது இஸ்ரேலியப் படைகள் இன்று றொக்கற் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளன. கட்டடத்தைக் காலி செய்யுமாறு அதன் உரிமையாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னரே இஸ்ரேல் அதனை தாக்கித் தகர்த்திருக்கிறது.

சர்வதேச செய்தியாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவு விடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் அந்த மாடிக் குடியிருப்புக் கட்டடம் மீது குண்டுகள் வீசப்பட்டன. கட்டடம் இடிந்து விழும் காட்சிகளை அல்-ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. சர்வதேச செய்தியாளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. கட்டடம் தரைமட்டமான காட்சிகளை ஒளிபரப்பிய அல் ஜஸீரா தொலைக் காட்சியின் அறிவிப்பாளர், “அல் ஜஸீரா அடங்கி விடாது. அல்ஜஸீராவை மௌனமாக்கி விட முடியாது”-என்று அறிவித்தார்.