இந்திய வெளியுறவு அமைச்சராக சுப்பிரமணியம் ஜெய்சங்கர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று மாலை புதுடில்லியில் நடந்த நிகழ்வில் பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் இந்திய வெளிவிவகார அமைச்சராக முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் இந்திய வௌவிவகார சேவையின் முன்னாள் மூத்த அதிகாரியான, சுப்பிரமணியம் ஜெய்சங்கரும், இந்திய மத்திய அமைச்சராக பதவியேற்றார். அவர் இந்திய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

64 வயதுடைய சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இந்திய நாடாளுமன்றத்தின்  அவைகளில் உறுப்பினராக இருக்காத போதும் இந்திய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.

இவர் பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

இவர் தமிழ்நாடு, திருச்சியைச் சேர்ந்த மூத்த சிவில் சேவை அதிகாரியும், அனைத்துலக விவகாரங்களில் வல்லுநராக இருந்தவரும், ஊடகவியலாளருமான கே.சுப்பிரமணியத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

1987ஆம் ஆண்டு இலங்கைக்கு அமைதிப்படையை கொண்டு வருவதில் இவரின் பங்கு முக்கியத்துவமாக அமைந்திருந்தது.  கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் முதல்நிலைச் செயலாளராகவும், சிறிலங்காவில் இந்திய அமைதிப்படையின் ஆலோசகராகவும் செயற்பட்டவர்.

2015ஆம் ஆண்டு தொடக்கம், இந்திய வெளிவிவகார செயலராக இருந்த போது, அமெரிக்கா, சீனா தொடர்பான இந்திய அரசின் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றினார்.

2018ஆம் ஆண்டு அவர் இந்திய வெளிவிவகாரச் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் இந்தியப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களில் பங்குபற்றியிருந்தார்.