கொரோனாவை பரப்பிய இளைஞனுக்கு 5 ஆண்டுகள் சிறை: வியட்நாமில் தமது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பிறருக்கு கொரோனா தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு அந்நாட்டி நீதி மன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
லீ வான் த்ரி எனும் அந்த இளைஞன் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி உள்ளார் என்றும் அந்த எட்டுப் பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
வியட்நாமில் கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவல் குறைவாகவே இருந்தது. எனினும் டெல்டா திரிபு காரணமாக அங்கு பரவல் அதிகரித்துள்ளது. 28 வயதாகும் லீ வான் த்ரி ஹோசி மின் நகரத்திலிருந்து தமது சொந்த மாநிலமான கா மாவிற்கு ஜூலை மாத தொடக்கத்தில் சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் இரு சக்கர வாகனம் மூலம் பயணித்தது குறித்த தகவல்களை மறைத்துள்ளதுடன் தனிமைப்படுத்தல் விதிகளையும் பின்பற்றாமல் இருந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
இதனால் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர் சென்ற சமூக நல மையம் ஒன்றின் ஊழியருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது ஒரே நாள் மட்டுமே நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து குறித்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.