பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடரும் தடுத்து வைப்பு- அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹசாந்த குணதிலக்க மற்றும் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மூவரும் 90 நாட்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நீதித்துறையின் ஊடாக சில அவகாசத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மூன்று செயற்பாட்டாளர்களையும் தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது என சட்டத்தரணி போபகே தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சு வசந்த முதலிகே, ஹஷந்த குணதிலக்க மற்றும் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைப்பதற்கு அனுமதி வழங்கியது.

இம்மாதம் 18 ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வசந்த முதலிகே உட்பட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த குழுவில் 15 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 19 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வசந்த முதலிகே, ஹஷந்த குணதிலக, மற்றும் வண. சிறிதம்ம தேரர் தடுத்து வைக்கப்பட்டதுடன் மற்றுமொருவர் ஒகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் ஆரம்பத்தில் 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டனர்.