தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குவோம் – சத்தியலிங்கம்

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பை அதிகரிக்க முறையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த முழுமையான  ஒத்துழைப்பு வழங்குவோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின்போது  நடைபெற்ற  இலங்கை  மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார  மீளாய்வு   அறிக்கை  தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மத்திய வங்கியின் அறிக்கையில் 2025ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தி 5  சதவீத அதிகரிப்பு என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் கைத்தொழில், சுற்றுலா மற்றும் விவசாயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் வேலையின்மை 3.9 சதவீதமாக  குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வங்குரோத்தடைந்த ஓரு நாடு ஒரு சிறியளவீலேனும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால் அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் தற்போது நாட்டில் டொலர் கையிருப்பு குறைவடைந்துள்ளது. இந்நிலையில் மொத்த தேசிய உற்பத்தி முக்கியமானது. இதற்கு சகல மாகாணங்களின் பங்களிப்பும் அவசியமாகும்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் 4.2 சதவீத பங்களிப்பை வடக்கு மாகாணமும், 5 சதவீத பங்களிப்பை கிழக்கு மாகாணமும் வழங்குகின்றது. 42 சதவீத பங்களிப்பை மத்திய மாகாணம் வழங்குகின்றது.

இதன்படி இந்த விடயங்களை கருத்தில் கொண்டு தேசிய  உற்பத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்பளிப்பை அதிகரிக்க முறையான வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்க வேண்டும்.  ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் இதுவரையில்  எடுக்கப்படவில்லை. தொழில் துறையை மேம்படுத்தும் நிர்வாக கட்டமைப்பு அவசியமாகும் என்றார்.