கருணாவை பயன்படுத்தினோம். அதற்காக அமைச்சுப் பதவி வழங்கவில்லை- ரணில்

போர் நிறுத்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானைப் பிரித்தெடுத்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு உபாய முறையாக மட்டுமே பயன்படுத்தினோம். அதற்காக அவருக்குக் கட்சியில் உப தவிசாளர் பதவியையோ அமைச்சுப் பதவியையோ வழங்கவில்லை என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய உறுப்பினர்கள் பலர் நேற்று தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவரது இல்லத்தில் சந்தித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இதன் போதே அவர் மேற்கண்டவாறு ரணில் குறிப்பிட்டார். அங்கு ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் கூறுகையில் தெரிவித்ததாவது ;

“ஓரிரவில் மூவாயிரம்படையினரைக் கொன்று குவித்தார் எனக் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார். அரசைப் பாதுகாக்கவே இவ்வாறானதொரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இதனால் இராணுவக் குடும்பங்கள் குழப்பமடைந்துள்ளன. 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்தோம்.

இதன் பின்னர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகக் கருணாவை உபாய முறையாக பயன்படுத்தினோம். அதற்காக அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் உபதவிசாளர் பதவியினையோ அமைச்சுப் பதவியினையோ வழங்கி உள்வாங்க வில்லை” என்றார்.