இலங்கையில் ஏற்பட்ட வன்முறை: கைது செய்யப்பட்ட 398 பேரில் 101 பேருக்கு பிணை

இலங்கையில் ஏற்பட்ட வன்முறை

இலங்கையில் கடந்த 9ம் தேதி ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  398 பேரில்  101 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இன்று காலை 6 மணி வரை 756 முறைபாடுகள்  காவல்துறையினருக்கு  கிடைத்துள்ளன என்று இலங்கை காவல்துறை ஊடகப் பேச்சாளர் மூத்த காவல் துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ  குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கிடைத்த முறைபாடுகள் தொடர்பில் பிரதி பொலீஸ் மா அதிபர்களின் நேரடி கண்காணிப்புக்களின் கீழ் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இதன்படி, நாடு முழுவதும் நேற்றைய தினம் நடத்தப்பட்ட சுற்றி வளைப்புக்களின் இந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்டவர்களுடன் இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களில் 101 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை  ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Tamil News