கருணா செய்த வேலையை தான் இன்று விக்னேஸ்வரன் செய்திருக்கிறார்-ஜனநாயகப் போராளிகள் கட்சி

“கருணா செய்த வேலையை தான் இன்று விக்னேஸ்வரன் செய்திருக்கிறார்” என, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

யாழில், இன்று நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், கருணா அம்மான், விடுதலைப் புலிகளுக்கு துரோகம் இழைத்தது போலே இன்று கூட்டமைப்பால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு துரோகமிழைத்துள்ளாரென்றார்.

ஒட்டுக்குழுக்கள் என்றும் இராணுவ புலனாய்வாளர்கள் என்றும் எம்மைக் கூறுவதற்கு எவருக்கும் உரிமை இல்லையெனத் தெரிவித்த அவர், தாங்கள் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து  அரசியலில் பயணத்தை  ஆரம்பித்து  இன்றுவரை பயணித்துக் கொண்டிருக்கின்றோமெனவும் எனினும், காலத்தின் தேவை கருதி நாம் தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தமது அரசியல் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறோமெனவும் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால்  உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தமது அரசியல் பயணத்தை இன்றும் தொடர்கிறதெனவும் தெரிவித்தார்.

“எனினும்,  தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று,  புதிய கட்சிகளை உருவாக்கியவர்கள் எம்மை ஒட்டுக்குழுக்களென்றும் இராணுவ புலனாய் வாளர்களென்றும் எம்மை விமர்சிக்கிறார்கள். நாங்கள் சிறு வயதில் இருந்தே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து  மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்றும் மக்களின் விடுதலைக்காக நாம் அரசியல் ரீதியில் எமது பயணத்தை ஆரம்பித்து தொடர்கின்றோம்” எனவும், அவர் கூறினார்.

எனவே, இனியாவது எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டுமெனவும், அவர்  கோரிக்கை விடுத்தார்.