உலக வங்கியின் பிரதித் தலைவர் இலங்கைக்கு விஜயம்

உலக வங்கியின் பிரதி தலைவர் சனிக்கிழமை (25) இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கிட்டும் வரை இலங்கையின் சுகாதார சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு உலக வங்கியின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெறவுள்ளமையை உறுதிப்படுத்தும் வகையில் இவரிடம் விஜயம் அமைந்துள்ளது.

இலங்கையின் சுகாதார சேவை கட்டமைப்பு தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடிக்கு மத்தியில் தரமான சேவைகளை வழங்க உலக வங்கியின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் இவ்விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக  சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் உலக வங்கியின் செயற்திட்ட பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகள் கிடைக்கப் பெறும் வரை சுகாதார சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு உலக வங்கியின் ஒத்துழைப்புக்கள் அத்தியாவசியமானதாகும்.

விஜயத்தின் போது உலக வங்கியின் பிரதி தலைவர் சிலாபம் – மாரவில பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளார்.

ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்த உலக வங்கியின் திட்டத்தின் கீழ் இந்த வைத்தியசாலை இயங்குகின்றது.  இந்த விஜயத்தின் பின்னர் உலக வங்கியின் பிரதித் தலைவர் இலங்கை தொடர்பில் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கவுள்ள விசேட அறிக்கை இந்த நாட்டின் சுகாதாரத் துறையின் எதிர்காலம் குறித்து தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தும் என வைத்தியர் ஜயசுந்தர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.