ஐ.நா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது : சீனா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நடவடிக்கைகள், மோதல்களைக் குறைப்பதையும் தணிப்பதையுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் எனவும், அங்கீகரிக்கப்படாத இராணுவ நடவடிக்கைகளை ஒருபோதும் சட்டப்பூர்வமாக்கக் கூடாது எனவும் சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை தொடர்பான வரைவுத் தீர்மானம் குறித்து ஐநா பாதுகாப்புச் சபையில் நேற்று (07) நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி பு கொங், பாதுகாப்புச் சபை தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றும், பதற்றத்தை மேலும் அதிகரித்து மோதல்கள் தீவிரமடைவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரைவுத் தீர்மானத்திற்கு ஆதரவாக 11 வாக்குகள் அளிக்கப்பட்ட அதேவேளை, பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

எனினும், பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களான சீனாவும் ரஷ்யாவும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததால், அந்த வரைவுத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.