“போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயார்; புதினும் சம்மதிப்பார்” – ட்ரம்ப் தகவல்

“தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆலோசனை மேற்கொண்டார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உக்ரைன் அரசு 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாகக் கூறியது. இதனைத் தொடர்ந்தே ட்ரம்ப்பின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.

இந்தப் போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் கூறும்போது, “ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் போரின் காரணமாக இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு தற்காலிக போர் நிறுத்தம் மிகவும் அவசியம்.

இந்த போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது. ரஷ்யாவும் ஒப்புக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். இந்த போர் நிறுத்த அவசியத்தை உணர்ந்து ரஷ்யா அதனை ஏற்கும்படி நம்மால் செய்ய முடிந்தால் அது மிகப்பெரிய விஷயம். ஒருவேளை அப்படிச் செய்ய முடியாமல் போனால், இன்னும் நிறைய மக்கள் கொல்லப்படுவார்கள்” என கூறியுள்ளார்.