இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்v

இலங்கையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான பல்வேறு அச்சுறுத்தல்களும் அடக்குமுறைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த  அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

குறிப்பாக தமிழ் ஊடகங்கள் பல்வேறு தரப்பினராலும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.

கடந்தகாலங்களில் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு இதுவரையும் நீதி கிடைக்காமல் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.

இந்த நிலையில், சட்டரீதியாக அணுக வேண்டிய விடயங்களுக்கு ஊடகங்களுக்குள்ளே அத்துமீறி நுழைந்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகத்தை அச்சுறுத்துவதும் வன்முறையில் ஈடுப்படுவதும் மக்களின் குரலை நசுக்குவதற்கு சமனானது, இதை நான் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

பல்வேறு நெருக்கடிக்குள் மக்களுக்காக தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவரும்  ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக யார் செயற்ப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்வதே அறம் ஆகும்.

மக்களுக்கான பணியை முன்னெடுத்துவரும் ஊடகங்களுக்கு எதிராக பல்வேறு வடிவங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.